விராட் கோலி நேரில் வந்து கேட்டுக்கொண்டதால் தான் 2017ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன்: மனம் திறந்த சேவாக்

தினகரன்  தினகரன்
விராட் கோலி நேரில் வந்து கேட்டுக்கொண்டதால் தான் 2017ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன்: மனம் திறந்த சேவாக்

டெல்லி: விராட் கோலி நேரில் வந்து கேட்டுக்கொண்டதால் தான் 2017ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்ததாக வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இந்திய அணியில் பயிற்சியாளருக்கும் கேப்டனுக்குமான மோதல் அவ்வப்போது இருந்துவந்திருக்கிறது. கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது அவருக்கும், அப்போதைய கேப்டனான சௌரவ் கங்குலிக்கும் இடையே மோதல்போக்கு இருந்தது. அவர்கள் இருவருக்கும் இடையே சரியான புரிதல் இருக்கவில்லை. அதன்விளைவாகத்தான் கங்குலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டு ராகுல் டிராவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் மீண்டும் அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில், அவருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே சரியான புரிதல் இல்லை. விராட் கோலி - அனில் கும்ப்ளே இடையேயான மோதல் வெளிப்படையாகவே இருந்தது. 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் தோற்று இந்திய அணி கோப்பையை இழந்தது. அந்த தொடருடன் அனில் கும்ப்ளேவின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிந்ததால் அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அதன்பின்னர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு, 2021ம் ஆண்டு டி20 உலக கோப்பை வரை அவர் தான் தலைமை பயிற்சியாளராக இருந்தார். பயிற்சியாளர் பதவிக்காலம் 2 ஆண்டுகள். ரவி சாஸ்திரிக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததால், 2019ம் ஆண்டு ரவி சாஸ்திரிக்கு மேலும் 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 2021ம் ஆண்டு ரவி சாஸ்திரி விலகியதையடுத்து, ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், 2017ம் ஆண்டு அனில் கும்ப்ளே விலகிய பின்னர், பயிற்சியாளர் பதவிக்கு வீரேந்திர சேவாக்கும் விண்ணப்பித்திருந்தார். ஆனால் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தது குறித்து வீரேந்திர சேவாக் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், விராட் கோலியும் பிசிசிஐ செயலாளராக இருந்த அமிதாப் சௌத்ரியும் என்னிடம் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளவில்லை என்றால் நான் விண்ணப்பித்திருக்கவே மாட்டேன்.சௌத்ரி என்னை சந்தித்து, விராட் கோலிக்கும் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே சரியான புரிதல் இல்லை. 2017 சாம்பியன்ஸ் டிராபியுடன் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிகிறது என்பதை சொல்லி என்னை அந்த பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதனால் தான் விண்ணப்பித்தேன். ஆனால் எனக்கு பயிற்சியாளர் பதவியில் ஆர்வம் இல்லை. ஒரு சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து வந்து நான் இந்திய அணிக்கு கிரிக்கெட்டில் செய்த பங்களிப்பே எனக்கு திருப்தியாகத்தான் இருந்தது என்று சேவாக் தெரிவித்தார்.

மூலக்கதை