ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 11 பேர் பலி.. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு!!

தினகரன்  தினகரன்
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 11 பேர் பலி.. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு!!

டெல்லி :ஆப்கானிஸ்தானில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.  நில அதிர்வால் மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இருந்து 133 கிமீ தொலைவில் ஹிந்துகுஷ் மலைத் தொடரில் 6.6 என ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இரவு 10.17 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அண்டை நாடுகளான துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பேகிஸ்தான் ஆகிய நாடுகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இரவு சுமார் 10 மணி அளவில் 2 நிமிடங்கள் வரை நில அதிர்வு உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கி, பொருட்கள் கீழே விழுந்ததால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு குழந்தைகளை தூக்கிக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அதே போல், பஞ்சாப் உத்தரப் பிரதேசம், ஹரியானாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அழுத்தமான நில அதிர்வு உணரப்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று வேண்டுவதாக பதிவிட்டார். நில அதிர்வு காரணமாக ஜம்மு - காஷ்மீரில் சில பகுதிகளில் செல்போன் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒருமுறை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பாகிஸ்தானில் வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள மலைப்பகுதிகளில், நிலச்சரிவு ஏற்பட்டு 19 வீடுகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆப்கானிஸ்தானில் உள்ள க்மன் மாகாணத்தில் 2 பேர் பலியாகி உள்ள நிலையில், ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

மூலக்கதை