தொடக்க கூட்டுறவு சங்கம் கணினிமயம்; மத்திய அரசால் பல கோடி ரூபாய் மிச்சம்

தினமலர்  தினமலர்
தொடக்க கூட்டுறவு சங்கம் கணினிமயம்; மத்திய அரசால் பல கோடி ரூபாய் மிச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை முழுதும் கணினிமயமாக்கும் திட்டத்தை, மத்திய அரசு நிதியில் செயல்படுத்த உள்ளதால், தமிழக அரசுக்கு, பல கோடி ரூபாய் செலவு மிச்சமாகிறது.

தொடக்க கூட்டுறவு சங்கங்களின் பணிகள், முழுதுமாக கணினிமயமாகவில்லை. இதனால், ஆவணங்கள் இன்றி கடன் வழங்குவது உட்பட, பல முறைகேடுகள் நடக்கின்றன.

நிபந்தனைகள்


எனவே, அனைத்து தொடக்க சங்கங்களையும் முழுதும் கணினிமயமாக்க முடிவு செய்யப்பட்டது. அந்த பணிகளை, தனியார் நிறுவனம் வாயிலாக மேற்கொள்ள, தமிழக அரசு, 2022 மே மாதம் ஒப்புதல் அளித்தது.

அதே நேரத்தில், மத்திய அரசு நாடு முழுதும் 65 ஆயிரம் தொடக்க கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தை அறிவித்தது.

இத்திட்டத்திற்கு நிதி உதவி பெற, 'சங்கங்களில் தணிக்கை முடிந்திருக்க வேண்டும், ஆண்டுக்கு 800 சங்கங்கள் கணினிமயமாக்க வேண்டும்' என, இரு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

விரைவில் 'டெண்டர்'


அதில் 10 சதவீதம் 'நபார்டு' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியும்; 60 சதவீதம் மத்திய அரசும் நிதி உதவி செய்கின்றன; மீதி செலவை மாநில அரசு ஏற்க வேண்டும்.

கணினிமயம், மென்பொருள் வடிவமைப்பு உள்ளிட்ட பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை, 'நபார்டு' மேற்கொள்ளும். அதற்கு விரைவில், 'டெண்டர்' கோரப்பட உள்ளது.

மத்திய அரசு, திட்டத்திற்கான நிதியில் முதல் கட்டமாக, 32.68 கோடி ரூபாயை, இம்மாத இறுதியில் விடுவிக்க உள்ளது. இந்த நிதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, நேரடியாக வழங்கப்பட உள்ளது.

இதற்காக, அந்த வங்கிகள் அனைத்தும், பாரத ஸ்டேட் வங்கியில் தனி கணக்கு துவக்கியுள்ளன. கணினிமய பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கான நிதியை, மத்திய கூட்டுறவு வங்கிகள் தனித்தனியே வழங்கும்.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


மத்திய அரசு திட்டத்தின் கீழ் வந்ததால், ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு செலவு கிடையாது. அதற்கு பின், ஒரு சங்கத்திற்கு மாதம் 2,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

மென்பொருள், மத்திய அரசின் வசம் இருக்கும். கணினிமயத்தால், ஒவ்வொரு சங்கத்திலும் நடக்கும் பணிகள் உடனுக்குடன் கண்காணிக்கப்படும்; முறைகேடு தடுக்கப்படும். மத்திய அரசு உதவியால், தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சங்கத்துக்கும் தலா, 3.99 லட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளது. அதில், மென்பொருளுக்கு, 72 ஆயிரத்து, 103 ரூபாய்; ஊழியர் பயிற்சிக்கு, 10 ஆயிரத்து, 198 ரூபாய்; கணினி உள்ளிட்ட சாதனங்கள் வாங்க, 1.22 லட்சம் ரூபாய்; ஒருங்கிணைப்பு உபகரணங்களுக்கு, 76 ஆயிரத்து, 910 ரூபாய்; டிஜிட்டல் கட்டமைப்புக்கு, 1.10 லட்சம் ரூபாய்; கண்காணிப்பு அலகுக்கு, 7,936 ரூபாய் செலவிடப்படும்.



சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை முழுதும் கணினிமயமாக்கும் திட்டத்தை, மத்திய அரசு நிதியில் செயல்படுத்த உள்ளதால், தமிழக அரசுக்கு, பல கோடி ரூபாய் செலவு மிச்சமாகிறது.தொடக்க

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை