ரகுவரன் குறித்து நினைவு கூர்ந்த ரோகிணி

தினமலர்  தினமலர்
ரகுவரன் குறித்து நினைவு கூர்ந்த ரோகிணி

தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ரகுவரன். 1982ல் வெளிவந்த 'ஏழாவது மனிதன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, குணச்சித்திரக் கதாபாத்திரங்கள், வில்லன் கதாபாத்திரங்கள் என பலவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென தனி ஒரு இடத்தைப் பிடித்தவர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பிற மொழிகளிலும் நடித்தவர்.

2008ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி திடீரென மறைந்தார். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கே ஒரு பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்குப் பின் அவரளவிற்கு தனித்துவம் வாய்ந்த நடிகராக தமிழ் சினிமாவில் யாரும் வரவில்லை என்பதுதான் உண்மை.

ரகுவரன், நடிகை ரோகிணியைக் காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2004ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றார்கள். அவர்களுக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார்.

இன்று ரகுவரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரைப் பற்றிய நினைவைப் பகிர்ந்துள்ளார் ரோகிணி. “மார்ச் 19, 2008ம் ஆண்டு ஒரு சாதாரண நாளாகத்தான் தொடங்கியது. ஆனால், எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் மாற்றியது. ரகு சினிமாவின் இந்தக் கட்டத்தை மிகவும் நேசித்தார். மேலும், ஒரு நடிகராகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை