ஆஸி.யுடன் முதல் டெஸ்ட் ஷ்ரேயாஸ் இல்லை

தினகரன்  தினகரன்
ஆஸி.யுடன் முதல் டெஸ்ட் ஷ்ரேயாஸ் இல்லை

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இந்திய அணியில், நடுவரிசை பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர் களமிறங்கும் வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் பிப். 9ம் தேதி தொடங்குகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த நடுவரிசை பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பெற்றுள்ளார்.முழு உடல்தகுதியை நிரூபிப்பதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமி (என்சிஏ) வளாகத்தில் அவர் தன்னை பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டார். ஷ்ரேயாஸ் இன்று நாக்பூர் சென்று சக வீரர்களுடன் பயிற்சி முகாமில் பங்கேற்க இருந்த நிலையில், மேலும் சில நாட்கள் என்சிஏ மையத்தில் தங்கியிருந்து உடல்தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, நாக்பூர் டெஸ்டில் ஷ்ரேயாஸ் விளையாட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், டெல்லியில் பிப்.17ம் தேதி தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டில் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் அல்லது ஷுப்மன் கில் நடுவரிசையில் விளையாடும் வாய்ப்பு உள்ளது.

மூலக்கதை