ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் - ஆர்.வி.உதயகுமார்

தினமலர்  தினமலர்
ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்  ஆர்.வி.உதயகுமார்

மலையாள சூப்பர் ஹிட் படமான மாளிகப்புரம் வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது. உன்னி முகுந்தன் நாயகனாக நடித்துள்ளார். ஒரு சிறுமி ஐயப்பன் கோவிலுக்கு போக வேண்டும் என்று ஆசைப் படுகிறாள். அவர் எப்படி சென்று வருகிறாள் என்பதே படத்தின் ஒருவரி கதை. விஷ்ணு சசி சங்கர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இப்படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது : ‛‛இந்த மாதிரி படத்திற்கு நான் பாடல் எழுதுவேன் என்று நினைக்கவில்லை. அதற்கு ஐயப்பனின் அருள் தான் காரணம். என்னால் முடிந்த அளவிற்கு பாடல் எழுதியிருக்கிறேன். இப்போது வரும் பெரிய திரைப்படங்களில் உணர்வு ரீதியாக இயக்குவதில்லை. அந்த வகையில் மாளிகப்புரம் உணர்வுபூர்வமாக இருக்கிறது. பலரும் திரையரங்கிற்கு செல்வதற்கு பயப்படுகிறார்கள். ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் திரைப்படம் ஆரோக்கியமாக இருக்கும். பாரதிராஜா படங்கள், சின்னக் கவுண்டர் போன்ற படங்கள் போல் உணர்வு ரீதியான பல படங்கள் எதிர்காலத்தில் வர வேண்டும். சம்பத் ராம் ஐயப்பனுக்கே வில்லனாக நடித்திருக்கிறார், வாழ்த்துக்கள், என்றார்.

நடிகர் உன்னி முகுந்தன் பேசும்போது : மாளிகப்புரம் என்னுடைய மற்ற படங்களைப் போல் வெறும் திரைப்படம் மட்டுமல்ல. இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் மிக முக்கியமான படமாக மாளிகப்புரம் இருக்கும். இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனக்கு ஒரு நல்ல குடும்ப படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நானும் ஐயப்பன் பக்தன் தான். இறுதிக் காட்சியில் என்னை மாற்றிக் கொள்ளும் அருமையான காட்சியைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.

12 வருடங்களுக்கு முன்பு சீடன் படத்திற்காக இங்கு வந்தேன். அப்போது தனுஷ் சாருடன் சிறந்த அனுபவம் கிடைத்தது. அந்த படத்திற்கு ஆதரவு கொடுத்தது போல் இந்த படத்திற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

மூலக்கதை