பிரேசிலில் கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவில் சிக்கிய 50 பேரின் கதி என்ன?

தினகரன்  தினகரன்
பிரேசிலில் கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவில் சிக்கிய 50 பேரின் கதி என்ன?

பரானா: பிரேசிலில் கனமழை பெய்து வருவதால் பரானா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசில் நாட்டின் தெற்கு மாநிலமான பரானாவில் கனமழை பெய்து வருவதால் பிஆர்-376 என்ற நெடுஞ்சாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் காணவில்லை. நெடுஞ்சாலையின் குறுக்கே நிலச்சரிவு ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கின. ஆறு டிரெய்லர் லாரிகள் மற்றும் 15 வாகனங்கள் மண்ணில் புதைந்துள்ளன.அதனால் இந்த விபத்தில் சிக்கிய 50 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. தகவலறிந்த ராணுவம், தீயணைப்புப் படையினர், சிவில் பாதுகாப்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலையில் வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவால் பாரனா பகுதியில் 680 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை