அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி

ஹூஸ்டன்: அமெரிக்காவில் உள்ள ஏரியில் மூழ்கிய தெலங்கானாவை சேர்ந்த 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானாவை சேர்ந்த உதேஜ் குந்தா(25) மற்றும் சிவா கெல்லிகாரி(25) ஆகியோர் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வந்தனர். இருவரும் வார விடுமுறையை கழிப்பதற்காக அங்குள்ள ஓசர்க்ஸ் ஏரிக்கு சனிக்கிழமை சென்றுள்ளனர். இதில் உதேஜ் ஏரியில் இறங்கி நீச்சல் அடித்துள்ளார். அவரால் கரைக்கு திரும்ப முடியவில்லை என தெரிகிறது. எனவே அவரை காப்பாற்றுவதற்காக கெல்லிகாரி ஏரியில் குதித்துள்ளார். ஆனால் இருவராலும் கரைக்கு திரும்ப முடியாமல் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருவரது சடலங்களையும் பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மீட்டனர். இறந்த மாணவர்களின் உடலை விரைவில் கொண்டு வருவதற்கு உதவுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை