ஜி-20 தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்த நல்வாய்ப்பு; பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி:‘ஜி-20 தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு. இதை உலகின் நலனுக்காக நாம் பயன்படுத்த வேண்டும்’ என்று பிரதமர் மோடி பேசினார்.ஒவ்வொரு மாதத்தி ன் கடைசி ஞாயிறு அன்று, அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 100வது மன் கி பாத் நிகழ்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான முக்கிய நிகழ்ச்சியாக இது உள்ளது. இந்தியா ஜி-20 தலைமைத்துவம் பெற்றதனால், நாடு முழுவதிலும் இருந்து மக்கள், அவர்கள் அடைந்த பெருமையை பற்றி எனக்கு கடிதம் எழுதுகின்றனர். விடுதலையின் அமிர்த கால பெருவிழா திட்டத்தின் கீழ் இந்த வாய்ப்பை இந்தியா பெற்றது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. உலகளாவிய நலன் சார்ந்த விசயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சியாக இருக்கட்டும். அதனுடன் தொடர்புடைய விஷயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், இந்தியாவில் இசை கருவி ஏற்றுமதி 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் நாடுகள் அதிகளவில் இந்திய இசை கருவிகளை வாங்குபவர்களாக உள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.