துப்பாக்கிச் சூட்டிற்கு பின் முதல் பேரணி; மரணத்தை கண்டு அஞ்சமாட்டேன்!: பாக். மாஜி பிரதமர் இம்ரான் ஆவேசம்

தினகரன்  தினகரன்
துப்பாக்கிச் சூட்டிற்கு பின் முதல் பேரணி; மரணத்தை கண்டு அஞ்சமாட்டேன்!: பாக். மாஜி பிரதமர் இம்ரான் ஆவேசம்

ராவல்பிண்டி: துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இம்ரான் கான், முதன் முறையாக ராவல்பிண்டியில் நடந்த பேரணியில் பங்கேற்று உரையாற்றினார்.  கடந்த 3ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்ற கூட்டத்தில், அவர் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக இம்ரான் கான் உயிர்தப்பினார். அவரது காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால் தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் ராவல்பிண்டியில் இம்ரான் கான் பங்கேற்கும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் அவர் மருத்துவர்கள் குழுவுடன் ஹெலிகாப்டர் மூலம் ராவல்பிண்டி வந்தார். குண்டு துளைக்காத காரில், குண்டு துளைக்காத ‘ஜாக்கெட்’டை இம்ரான் கான் அணிந்திருந்தார். சாதாரணமாக நடக்க முடியாததால், மருத்துவ உபகரண உதவியுடன் ஆதரவாளர்கள் புடைசூழ நடந்து வந்தார். தொடர்ந்து அவர் பேரணி நடந்த இடத்தில் பேசுகையில், ‘நான் மரணத்தைக் கண்டு அஞ்சமாட்டேன். எங்களது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது எம்பி பதவிகளை ராஜினமா செய்வார்கள். இதற்காக அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்துவோம்’ என்றார். தொடர்ந்து அவர் ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இம்ரான் கானின் கட்சியானது, பஞ்சாப், கைபர் பக்துன்க்வா, பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் ஆகிய இடங்களில்  ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை