இவர்களாவது... தமிழை வளர்ப்பதாவது! எல்லாம் வேஷம்!

தினமலர்  தினமலர்
இவர்களாவது... தமிழை வளர்ப்பதாவது! எல்லாம் வேஷம்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


பேராசிரியர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ண சாஸ்திரி, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழ் வாழ்க! தமிழ் வளர்ப்போம்! ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம்!' என்று, தமிழுக்கான ஏகபோக உரிமையாளர்களாக தங்களைத் தாங்களே பறைசாற்றிக் கொள்ளும் திராவிட செம்மல்கள், தங்களின் பிள்ளைகளை படிக்க வைப்பதோ, ஆங்கில வழி கல்வியில் தான். அவர்களின் மகன்களும், மகள்களும் ஹிந்தி மொழியை கற்பதற்கு எந்தவிதமான தடையுமில்லை.

கடந்த, 2019 லோக்சபா தேர்தல் நேரத்தில், தமிழகத்தின் தற்போதைய நீர்வளத் துறை அமைச்சரான துரைமுருகன், வேலுார் தொகுதியில் போட்டியிட, தன் மகன் கதிர் ஆனந்துக்கு, 'சீட்' கேட்டு போராடிப் பெற்றார். அதற்கு அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?

'என் மகன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில், லோக்சபாவில் சரளமாகப் பேசுவான்' என்பது தான். ஹிந்தியையே தாய் மொழியாகக் கொண்ட பலர் இருக்கும் லோக்சபாவில், அவ்வாறு பேச முடியுமானால், அவரின் மகனுக்கு எந்த அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்?

அதே சமயம் சாமானியன் ஒருவன், ஹிந்தி மொழியை கற்றுக்கொண்டு விட்டால், அவன் வளர்ந்து விடுவானே என்று, தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். அத்துடன், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தலைவர்களான பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர், இங்கு ஹிந்தியில் உரையாற்றினால், தமிழக மக்கள் தெள்ளத்தெளிவாக அதை புரிந்து கொண்டு விடுவர்.

அப்படி நடந்தால், நம்முடைய பித்தலாட்டங்கள், சுலபமாக வெளிச்சத்திற்கு வந்து விடும். அதன்பின் தங்களின் ஆட்டம் குளோஸ் ஆகி விடும் என்றும் அஞ்சுகின்றனர். அதேநேரத்தில், 'தமிழ்... தமிழ்...' என வார்த்தைக்கு வார்த்தை பேசுவதால் மட்டும், இவர்கள் பெரிய்ய தமிழ்ப் புலவர்களா என்ன... அது தான் இல்லை!

அய்யம்பெருமாள் கோனார், வாரியார் சுவாமிகள், ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராஜனார், பண்டித மணி கதிரேசன் செட்டியார், அவ்வை துரைசாமி பிள்ளை, ம.பொ.சிவஞானம் போன்ற சான்றோர் தமிழுக்குச் செய்யாத தொண்டையா, திராவிட செம்மல்கள் செய்து விட்டனர்.

'பொதிகை' தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை காலை, 9:௦௦ மற்றும் இரவு, 11:௦௦ மணிக்கு, 'தமிழ்த் தேன் சுவைத்தேன்' என்ற அருமையான தமிழ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உண்மையிலேயே தமிழின் மீது பற்றும், அதை வளர்க்கும் ஆர்வமும் இருந்தால், முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனல்களில், ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்களின் உதவியுடன், தினமும் சங்க இலக்கியங்கள் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்த ஆவன செய்யலாமே! ஆனால், அப்படி, செய்ய மாட்டார்கள்.

ஏனெனில் இவர்கள், சந்தர்ப்பவாத தமிழ் வியாபாரிகள். இவர்கள் நடத்தும் சேனல்களிலேயே, செய்தி வாசிப்பாளர்கள் பலருக்கு, ல, ழ, ள போன்றவற்றை உச்சரிக்க திராணி இல்லை. இவர்களாவது தமிழை வளர்ப்பதாவது... எல்லாம் வேஷம்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:பேராசிரியர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ண சாஸ்திரி, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழ்

மூலக்கதை