பா.ஜ எம்.பி தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பா.ஜ எம்.பி தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மக்களவை தொகுதி பா.ஜனதா எம்.பி. அருண்குமார் சாகர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அத்தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது, அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்கள் வைத்ததாகவும், சுவர் விளம்பரம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது கந்த் போலீஸ் நிலையத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, ஷாஜகான்பூரில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின்போது ஆஜராகாததால், அவருக்கு எதிராக நிதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. அதன்பிறகும் அவர் ஆஜராகாததால், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்தநிலையில், நேற்று மாஜிஸ்திரேட்  அஸ்மா சுல்தானா முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அருண்குமார் சாகர் எம்.பி. ஆஜராகவில்லை. இதனால், அவரை ‘தலைமறைவு குற்றவாளி’ என்று மாஜிஸ்திரேட்  அறிவித்தார். அருண்குமார் சாகர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டுமாறு உத்தரவிட்டார்.

மூலக்கதை