அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி

தினகரன்  தினகரன்
அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி

தோஹா: ஃபிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. லுசெய்ல் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள அர்ஜென்டினா அணி (4வது ரேங்க்) உலக தரவரிசையில் 53வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அபாரமாக கோல் அடிக்க, அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. 4 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. முதல் பாதியில் மெஸ்ஸி அடித்த ஒரு கோல் மற்றும் மார்டினஸ் அடித்த 2 கோல் ‘ஆஃப் சைடு’ என நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2வது பாதியில் அர்ஜென்டினா அணியின் தற்காப்பு அரண் சற்று சோம்பலாக செயல்பட, அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சவுதி அரேபியா வீரர்கள் சலேஹ் அல்ஷெரி 48வது நிமிடத்திலும், அல்தாவ்சரி 53வது நிமிடத்திலும் அமர்க்களமாக கோல் போட்டு அசத்தினர். இதனால் சவுதி 2-1 என முன்னிலை பெற, அந்நாட்டு ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது. இதை கொஞ்சமும் எதிர்பாராத அர்ஜென்டினா வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.இதைத் தொடர்ந்து, பதில் கோல் அடிக்க அவர்கள் கடுமையாக முயற்சித்த நிலையில், சவுதி வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அதை முறியடித்தனர். குறிப்பாக, கோல் கீப்பர் முகமது அல் ஓவைஸ் துடிப்புடன் செயல்பட்டு பல வாய்ப்புகளை தடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதாக சவுதி வீரர்கள் 6 பேருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. கடைசி கட்ட நிமிடங்களில் எப்படியாவது கோல் அடித்து போட்டியை டிரா செய்துவிட வேண்டும் என அர்ஜென்டினா முனைப்பு காட்டினாலும், அவர்களின் ஒவ்வொரு முயற்சியையும் சவுதி வீரர்கள் முறியடித்து சுவர் போல நின்றனர். ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்திக்க, சவுதி அணி சி பிரிவில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி 6வது முறையாக உலக கோப்பையில் விளையாடினாலும், இப்போது தான் முதல் லீக் ஆட்டத்தில் முதல் முறையாக வென்றுள்ளது.அர்ஜென்டினா அணி அடுத்த லீக் ஆட்டங்களில் மெக்சிகோ, போலந்து அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் சிக்கியுள்ளது. தொடர்ச்சியாக 36 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்து வந்த அந்த அணி, இத்தாலி அணியின் சாதனையை (37 வெற்றி) சமன் செய்யும் வாய்ப்பையும் நழுவவிட்டது.

மூலக்கதை