ஜம்முவில் என்கவுன்டர் 4 தீவிரவாதிகள் சாவு

தினகரன்  தினகரன்
ஜம்முவில் என்கவுன்டர் 4 தீவிரவாதிகள் சாவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த இரண்டு என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் டிராச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இதில் இரண்டு பேர் ஹனான் பின் யாகூப் மற்றும் ஜாம்ஷெட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 2ம் தேதி சிறப்பு போலீஸ் அதிகாரி ஜாவீத் தர் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.

மூலக்கதை