அமெரிக்காவில் பயங்கரம் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தல்: கார் எரிந்த நிலையில் மீட்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் பயங்கரம் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தல்: கார் எரிந்த நிலையில் மீட்பு

லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவில் இந்திய வம்சவாளியை சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 4 சீக்கியர்கள் கத்தி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மெர்சிட் கவுண்டியை சேர்ந்தவர் ஜஸ்தீப் சிங் (27). இவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27). இவர்களுடன் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூரில் உள்ள ஹர்சி பின்டி பகுதியை (சீக்கியர் குடும்பத்தினர்) பூர்வீகமாக கொண்டவர்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் வணிக வளாகம் சென்ற 4 பேரும் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களது கார் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மெர்சிட் கவுண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கடத்தப்பட்டவரில் ஒருவரின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 48 வயது நபரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். எனினும் கடத்தப்பட்ட குடும்பத்தினர் இன்னும் மீட்கப்படவில்லை. கடத்தலுக்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.

மூலக்கதை