தேர்தல் இலவச வாக்குறுதி கட்சிகளிடம் கருத்து கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம்

தினகரன்  தினகரன்
தேர்தல் இலவச வாக்குறுதி கட்சிகளிடம் கருத்து கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: இலவச வாக்குறுதிகள் தொடர்பாக வரும் 19ம் தேதிக்குள் தங்களின் கருத்தை தெரிவிக்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. தேர்தலின் போது கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அளிப்பது சர்ச்சையாகி, விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இலவசங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இலவச அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்துள்ள பொதுநலன் வழக்கை, 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. இது தனது விசாரணையின்போது, ‘இந்த விவகாரம் முக்கிய பிரச்னை என்பதால் அனைத்து தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும்,’ என தெரிவித்தது. இதில், ‘அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டு சமூக நீதியை காக்கவே இலவசங்கள் வழங்கப்படுகிறது,’ என திமுக பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எழுதியுள்ளது. அதில், ‘இலவச வாக்குறுதிகளை கொடுக்கும் கட்சிகள், அவற்றை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்கள் குறித்த விவரங்களையும் கொடுக்க வேண்டும். கைவசமுள்ள நிதி, வரி விதிப்பு, கடன் பெறும் திட்டங்கள் இதில் இடம் பெற வேண்டும். இது தொடர்பாக தனது கருத்துகளை அக்டோபர் 19ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக கொடுக்க வேண்டும்,’ என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.* கட்சிகள் எதிர்ப்புதேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்துக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘தேர்தல் ஆணையத்தின் இச்செயல், இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மற்றொரு தாக்குதல்,’ என தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் கூறுகையில், ‘பிரதமரின் கருத்தை தேர்தல் ஆணையம் தனது கருத்தாக தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையம் தன் மீதான நம்பகத்தன்மையை சிதைக்கும் வகையில் செயல்படுகிறது,’ என கூறியுள்ளார்.

மூலக்கதை