பிரித்விராஜை துரிதப்படுத்திய சிரஞ்சீவி

தினமலர்  தினமலர்
பிரித்விராஜை துரிதப்படுத்திய சிரஞ்சீவி

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் லூசிபர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் காட்பாதர் என்கிற பெயரில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. நேற்று தியேட்டர்களிலும் இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிரஞ்சீவி, இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “ரீமேக் படங்கள் தானே என சாதாரணமாக ஒதுக்கி விட்டு செல்ல முடியாது. காரணம் ஒரிஜினலில் அவை கொடுத்த உணர்வுகளையும் பெற்ற வெற்றியையும் மீண்டும் நாம் இங்கே நிரூபித்து காட்டுவதே மிகப்பெரிய சவால் தான். லூசிபர் திரைப்படம் பார்த்தபோது எனக்கு பிடித்திருந்தாலும் முழு திருப்தி ஏற்படவில்லை. அதனால் கொஞ்சம் கூட ரசிகர்களுக்கு தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தேவையற்ற காட்சிகளை நீக்கிவிட்டு படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளோம். ஒரிஜினலை விட இது இன்னும் விறுவிறுப்பாக இருக்கும். இந்த படத்தில் எனக்கு கதாநாயகியும் பாடல்களும் இல்லாமல் இருந்ததும் இந்த படத்தை நான் தேர்ந்தெடுத்து நடிக்க காரணம் என்று கூறினார்.

மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என நிருபர்கள் கேட்டதற்கு, நிச்சயமாக இரண்டாம் பாகம் இருக்கிறது. இந்த படத்தின் ஒரிஜினலை இயக்கிய பிரித்விராஜிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இரண்டாம் பாகம் குறித்து கேட்டபோது அங்கே விரைவில் தயாராகிவிடும் என்று கூறினார். அவருடன் தொடர்பிலேயே இருக்கிறேன்” என்று கூறி காட்பாதர் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உண்டு என்கிற சந்தோஷ தகவலையும் ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார் சிரஞ்சீவி.

மூலக்கதை