ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய ரம்யா

தினமலர்  தினமலர்
ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய ரம்யா

தமிழில் சிம்பு ஹீரோவாக அறிமுகமான காலகட்டத்தில் அவர் நடித்த குத்து படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா என்கிற ரம்யா. அந்த படத்திற்கு பிறகு குத்து ரம்யா என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தொடர்ந்து அர்ஜுனுடன் கிரி, தனுசுடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்தவர், தமிழில் கடைசியாக சிங்கம் புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கர்நாடக மாநிலத்தில் இருந்து பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு 5 வருடங்கள் எம்.பி.,யாக பொறுப்பு வகித்தார்.

அந்த சமயத்தில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடைசியாக 2016ல் பிரபல தெலுங்கு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா முதன்முதலாக கன்னடத்தில் இயக்கிய, அவரது திரையுலக பயணத்தில் கடைசி படமாக அமைந்த நகரஹவு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரம்யா. இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார் ரம்யா. அவர் நடிக்கும் படத்திற்கு ரவிச்சந்திரன் படத்தின் ஹிட் பாடலான ‛சுவாதி முத்தின மலஹனியே' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராஜ் பி.ஷெட்டி இயக்குகிறார். இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் தானும் ஒருவராக இணைந்துள்ளார் ரம்யா..

மூலக்கதை