சித்தூர் காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்-3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

தினகரன்  தினகரன்
சித்தூர் காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. இதனால் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில்.இந்த கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள உண்டியலில் தங்கம், பணம், வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தி செல்கிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை, நேற்று ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து இரண்டு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் எப்போதும் இல்லாத அளவிற்கு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.இதனால் சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், கோயில் வளாகத்தில் நேற்று தன்வந்திரி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மூலக்கதை