தோல்வியை ஏற்காமல் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களால் 125 பேர் பலி!

தினமலர்  தினமலர்
தோல்வியை ஏற்காமல் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களால் 125 பேர் பலி!

மலாங்:இந்தோனேஷியாவில், உள்ளூர் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்தாட்ட போட்டியில், தோல்வி அடைந்தஅணியின் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், கால்பந்தாட்டமைதானம் கலவர பூமியாக மாறியது. வன்முறை தீவிரமடைந்ததை அடுத்து, போலீசார் மைதானத்திற்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும், மூச்சு திணறியும் 125 பேர் உயிரிழந்தனர்.

நம் நாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு உள்ளதை போலவே, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். அந்நாட்டில், கால்பந்தாட்டம் விளையாடுவதும், போட்டிகளை பார்ப்பதும் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. உள்நாட்டுக்குள்ளேயே ஏராளமான கால்பந்தாட்ட அணிகள் உள்ளன. இவர்களுக்குள் நடக்கும் போட்டிகளை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வர்.

இதுபோன்ற போட்டிகளின் போது இரு அணிகளின் ரசிகர்கள் இடையே பலமுறை சண்டை நடந்துள்ளது. இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில், 2020ல் நடந்த கவர்னர் கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் போது நடந்த கலவரத்தில் மைதானம் சூறையாடப்பட்டது.

42 ஆயிரம் ரசிகர்கள்

இந்த சம்பவத்தை தொடர்ந்து, போட்டி நடக்கும் இரு அணிகளில், ஒரு அணியின் ஆதரவாளர்களை மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கும் நடைமுறையை இந்தோனேஷிய கால்பந்தாட்ட சங்கம் பின்பற்றி வருகிறது.இந்நிலையில், கிழக்கு ஜாவாவின் மலாங் நகரில் உள்ள காஞ்சுருஹன் கால்பந்தாட்ட மைதானத்தில், உள்ளூர் அணிகளான அரேமா - பெர்சேபயா ஆகியவற்றுக்கு இடையே, கால்பந்தாட்ட போட்டி நடந்தது.

இந்த போட்டியை, மலாங்க் நகரை சேர்ந்த அரேமா அணி ஏற்பாடு செய்திருந்தது. எனவே, அந்த அணியின் ஆதரவாளர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். எதிர் அணியான பெர்சேபயா அணி ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. மொத்தம், 42 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டதாக கூறப்படுகிறது.இந்த போட்டியில், பெர்சேபயா அணியிடம், அரேமா அணி 3 - 2 என்ற 'கோல்' கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.


பதற்றம்


விளையாட்டு வீரர்கள், கால்பந்தாட்ட சங்க நிர்வாகிகள் மீது பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வீச துவங்கினர். இதனால், மைதானத்தில் பதற்றம் ஏற்பட்டது. ரசிகர்களில் ஒரு தரப்பினர் சாலையில் இறங்கி பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர். ஐந்து போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 'கடந்த 23 ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் தோல்வி அடையாத அரேமா அணி, இந்த போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து அரேமா அணி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்' என, வன்முறையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மைதானத்திலும் கலவரம் தீவிரமடைந்ததை அடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் மக்கள் பதற்றத்தில் அங்கும் இங்கும் ஓடினர். ஒரே நேரத்தில் அனைவரும் வெளியேறும் வாசலை நோக்கி ஓடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் கீழே விழுந்து மிதிபட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில், 34 பேர் மைதானத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.

கவலைக்கிடம்



மருத்துவமனையில் 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எட்டு மருத்துவமனைகளில், 100 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த கலவரத்தை அடுத்து, உள்ளூர் கால்பந்தாட்ட போட்டியை காலவரையின்றி இந்தோனேஷியா கால்பந்தாட்ட சங்கம் ரத்து செய்துள்ளது.

கால்பந்தாட்ட மைதானத்தில் கண்ணீர் புகை குண்டு பயன்படுத்த, 'பிபா' எனப்படும், சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. கலவரத்தை சமாளிக்க வேறு வழியின்றி கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக இந்தோனேஷிய போலீசார் தெரிவித்தனர்.
இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ கூறியதாவது:கால்பந்தாட்ட மைதானத்தில் நடந்த சோகத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவே கடைசியாக இருக்கட்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் அரங்கேற அனுமதிக்க கூடாது.

குற்றச்சாட்டு

இந்தோனேஷியாவின் விளையாட்டுத் திறன், மனிதநேயம் மற்றும் சகோதரத்துவ உணர்வை நாம் தொடர்ந்து பேண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கால்பந்தாட்ட போட்டி நடக்கும் மைதானங்களில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து மதிப்பிடும்படி, அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர், போலீஸ் தலைவர் மற்றும் கால்பந்தாட்ட சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
'பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி மைதானத்திற்குள் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதே உயிரிழப்புகளுக்கு காரணம்' என, மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டி உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.


1964: பெரு நாட்டின் லிமாவில் நடந்த ஒலிம்பிக் கால்பந்து காலிறுதியில், பெரு - அர்ஜென்டினா போட்டியின் போது நடந்த கலவரத்தில், 320 பேர் பலி; 1,000 பேர் காயம்.

1982 அக்.,: ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில், நெரிசலில் சிக்கி, 66 ரசிகர்கள் பலி; 340 பேர் காயம்.

1985 மே: பிரிட்டனின் பிராட்பர்டு நகரில், கால்பந்து மைதான தீ விபத்தில், 56 பேர் பலி; 200 பேர் காயம்.

1989 ஏப்.,: பிரிட்டனின் ஷிப்பீல்டு நகரில் நடந்த லிவர்பூல் - நாட்டிங்காம் அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியின் போது நெரிசலில் சிக்கி, 96 ரசிகர்கள் பலி.

1991 ஜன.,: தென் ஆப்ரிக்காவின் ஆர்க்னே நகரில், ஒரு அணியின் ரசிகர் எதிரணியின் ரசிகரை கத்தியால் தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில், 42 பேர் பலி.

1996 அக்.,: கவுதமாலா - கோஸ்டாரிகா இடையிலான உலக கோப்பை தகுதி போட்டியில், ரசிகர்கள் இருக்கை சரிந்து விழுந்ததில், 82 பேர் பலி.

1998 மார்ச்: நேபாளத்தின் காத்மாண்டுவில், மைதானத்தின் வெளியேறும் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 90 ரசிகர்கள் பலி.

2001 மே: கானாவில் ஏக்ரா மைதானத்தில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி, 126 பேர் பலி.

2012 பிப்., 12: எகிப்து சிட்டி நகரின் கால்பந்து மைதானத்தில் நடந்த வன்முறையில், 73 பேர் பலி; 1,000 பேர் காயம்.

2022 அக்., 2: இந்தோனேஷிய மைதானத்தில் நெரிசலில் சிக்கி, 125 பேர் பலி.





மலாங்:இந்தோனேஷியாவில், உள்ளூர் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்தாட்ட போட்டியில், தோல்வி அடைந்தஅணியின் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால்,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை