பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்..6 பேர் நீரில் மூழ்கி பலி..52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

தினகரன்  தினகரன்
பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்..6 பேர் நீரில் மூழ்கி பலி..52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

அரோரா: பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயலுக்கு 6 பேர் உயிரிழந்தனர். புயல், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணி முடிக்கிவிடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் நோரு என்ற புயல் நேற்று தாக்கியது. அங்குள்ள அரோரா, நியூவா எசிஜா ஆகிய இரு மாகாணங்களையும் நோரு புயல் பந்தாடியது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரையும் தூக்கி வீசப்பட்டன. பலத்த புயல் வீசியதை தொடர்ந்து கனமழை கொட்டியது. இதில் அரோரா, நியூவா எசிஜா மாகாணங்களில் உள்ள பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நோரு புயலால் பாதிக்கப்பட்ட 52 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அரோரா, நியூவா எசிஜா மாகாணங்களில்  மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. இதனிடையே அரோரா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்புக்குழுவினர் படகில் சென்று கொண்டிருந்த போது சுவரில் படகு மோதி கவிழ்ந்ததில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். புயல், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.

மூலக்கதை