எந்தவொரு தீவிரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது!: வெளியுறவு அமைச்சர் ஐ.நா-வில் பேச்சு

தினகரன்  தினகரன்
எந்தவொரு தீவிரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது!: வெளியுறவு அமைச்சர் ஐ.நாவில் பேச்சு

நியூயார்க்: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் பலமுறை ஐ.நா சபையில் தீர்மானங்கள் கொண்டு வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கண்ட தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் உயர்மட்ட அமர்வில் இந்தியா சார்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், ‘கடன், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படும். எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை பின்பற்றுவோம். எந்தவொரு தீவிரவாதச் செயலையும் நியாயப்படுத்த முடியாது. எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும், தீவிரவாதத்தின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது. ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் நாடுகளும் உள்ளன. அவர்களின் சொந்த நலனுக்கோ அல்லது அவர்களின் நற்பெயருக்கோ அதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை’ என்று பேசினார். இந்த நிகழ்ச்சி நிரலில் உக்ரைன் மோதல், ஐநா சீர்திருத்தம், ஜி20, காலநிலை நடவடிக்கை, உணவுப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான தரவு ஆகியவை அடங்கும் என்று ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை