வெற்றியை நோக்கி மேற்கு மண்டலம்: துலீப் டிராபி பைனலில் ஆதிக்கம் | செப்டம்பர் 24, 2022

தினமலர்  தினமலர்
வெற்றியை நோக்கி மேற்கு மண்டலம்: துலீப் டிராபி பைனலில் ஆதிக்கம் | செப்டம்பர் 24, 2022

கோவை: துலீப் டிராபி பைனலில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரகானே தலைமையிலான மேற்கு மண்டல அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் துலீப் டிராபி 59வது சீசன் நடக்கிறது. கோவை, ஆவாரம்பாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் பைனலில் மேற்கு, தெற்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் மேற்கு மண்டலம் 270, தெற்கு மண்டலம் 327 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், மேற்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 376/3 ரன் எடுத்திருந்தது.

 

சர்பராஸ் சதம்: நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த மேற்கு மண்டல அணியின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 250 ரன்னை கடந்தார்.  கிருஷ்ணப்பா கவுதம் பந்தில் 265 ரன்களுக்கு அவுட்டானார். சர்பராஸ் கான் சதம் அடித்தார். ஹெட் படேல் அரைசதம் கடந்தார்.

மேற்கு மண்டல அணி, இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 585 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. சர்பராஸ் (127), ஹெட் படேல் (51) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கடின இலக்கு: பின், 529 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தெற்கு மண்டல அணிக்கு மயங்க் அகர்வால் (14), கேப்டன் ஹனுமா விஹாரி (1), பாபா இந்திரஜித் (4), மணிஷ் பாண்டே (14), ரிக்கி புய் (13) ஏமாற்றினர். துவக்க வீரர் ரோஹன் (93) அரைசதம் கடந்தார்.

ஆட்டநேர முடிவில் தெற்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 154/6 ரன் எடுத்திருந்தது. ரவி தேஜா (8), சாய் கிஷோர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். மேற்கு மண்டலம் சார்பில் உனத்கட், சாம்ஸ் முலானி, ஆதித் ஷேத் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

தெற்கு மண்டல அணிக்கு 4 விக்கெட் மட்டும் கைவசம் உள்ள நிலையில் எஞ்சிய 375 ரன்னை எடுப்பது கடினம் என்பதால், மேற்கு மண்டல அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

மூலக்கதை