இந்திய பவுலிங் சொதப்பல் * முதல் போட்டியில் தோல்வி | செப்டம்பர் 20, 2022
மொஹாலி: முதல் ‘டி–20’ போட்டியில்வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியாவின் வேட், இந்திய அணிக்கு ‘வேட்டு’ வைத்தார். பவுலிங், பீல்டிங்கில் சொதப்பியதால், 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராகுல், ஹர்திக் பாண்ட்யாவின் அரைசதம் வீணானது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார்.
மூன்று ஆண்டுக்குப் பின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்காக டிம் டேவிட்அறிமுகம் ஆனார்.
ராகுல் அரைசதம்
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. ரோகித், 11 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். திணறலாக ஆட்டத்தை துவக்கிய கோஹ்லி, 7 பந்தில் 2 ரன் மட்டும் எடுத்த போது, நாதன் எல்லிஸ் பந்தில் வீழ்ந்தார்.
ராகுலுடன் இணைந்தார் சூர்யகுமார். மேக்ஸ்வெல் பந்தில் சிக்சர் அடித்த ராகுல், 32 வது பந்தில் அரைசதம் எட்டினார். சர்வதேச ‘டி–20’ல் இது இவரது மூன்றாவது அரைசதம்.
சூர்யகுமார் விளாசல்
மூன்றாவது விக்கெட்டுக்கு 42 பந்தில் 68 ரன் சேர்த்த நிலையில் ராகுல் (55), ஹேசல்வுட் ‘வேகத்தில்’ வீழ்ந்தார். போட்டியின் 13வது ஓவரில் பந்தை சுழற்றினார் ஜாம்பா. இதன் ஐந்தாவது பந்தை 84 மீ., துாரத்துக்கு அனுப்பி சிக்சராக மாற்றினார் சூர்யகுமார். 25 பந்தில் 46 ரன் எடுத்த சூர்யகுமார், கிரீன் பந்தில் அவுட்டானார்.அக்சர் படேல் (5) நிலைக்கவில்லை.
பாண்ட்யா நம்பிக்கை
போட்டியில் 25 பந்துகள் மீதமிருந்த நிலையில் களமிறங்கினார் தினேஷ் கார்த்திக். இவர் 6 ரன் மட்டும் எடுத்து திரும்பினார். பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பாண்ட்யா, கிரீன் பந்தில் சிக்சர் அடித்தார். பின் வந்த ஹேசல்வுட் பந்துகளில் பவுண்டரிகளாக விளாசிய இவர், 25 வது பந்தில் அரைசதம் எட்டினார்.
கிரீன் வீசிய கடைசி ஓவரின் கடைசி 3 பந்தில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடிக்க, ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன் குவித்தது.
வேட் கலக்கல்
கடின இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச் (22), கிரீன் ஜோடி துவக்கம் கொடுத்தது. இந்திய வீரர்கள் பந்துவீச்சு, பீல்டிங் சுமாராக அமைய 9.3 ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்களை எட்டியது. இந்நிலையில் அரைசதம் விளாசிய கிரீன் (61) கிளம்பினார். உமேஷ் ஓவரில் ஸ்மித் (35), மேக்ஸ்வெல் (1) அவுட்டாகினர். இங்லிஸ் (17) போல்டானார்.
கடைசி 4 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 55 ரன் தேவைப்பட்டன. இந்த தருணத்தில் மாத்யூ வேட் மிரட்டினார். ஹர்ஷல் வீசிய 18வது ஓவரில் இவர், 3 சிக்சர் விளாச, 22 ரன்கள் எடுக்கப்பட்டன. புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் வேட் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடிக்க, 16 ரன்கள் கிடைத்தன. கடைசி ஓவரில் சகால் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கம்மின்ஸ் வெற்றியை உறுதி செய்தார். ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவரில் 211/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வேட் (45 ரன் , 6 பவுண்டரி, 2 சிக்சர், ஸ்டிரைக் ரேட் 214.28), கம்மின்ஸ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
நழுவிய வாய்ப்பு
சகால் வீசிய 4.3 வது ஓவரில் பந்தை எதிர்கொண்ட கிரீன், ‘ஸ்வீப் ஷாட்’ ஆட முயன்றார். பந்து இவரது கால் ‘பேடில்’ பட்டுச் சென்றது. இந்திய வீரர்கள் யாரும் அப்பீல் செய்யாமல் விட்டனர். ‘ரீப்ளேயில்’ பந்து ‘ஸ்டம்சை’ தகர்த்து தெரியவர ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
* 43 ரன் எடுத்த போது, பாண்ட்யா பந்தில் கிரீன் கொடுத்த எளிய ‘கேட்சை’ கோட்டை விட்டார் அக்சர் படேல்.
* 19 ரன்னில் ஸ்மித் கொடுத்த வாய்ப்பை, தன் பங்கிற்கு நழுவவிட்டார் ராகுல்.
தவிர பீல்டிங்கும் ஏமாற்றமாக இருந்தது.
சொதப்பிய புவனேஷ்வர்
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு புவனேஷ்வர் குமாரின் கடைசி கட்ட பவுலிங் காரணமாக இருந்தது. பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக 19 வது ஓவர் வீசிய இவர், 19, 14 ரன் கொடுத்து சொதப்பினார்.
* இது நேற்றும் தொடர்ந்தது. நேற்று 17வது ஓவரில் 15 ரன் கொடுத்தார். மீண்டும் 19வது ஓவர் வீசிய இவர், இம்முறை 16 ரன் கொடுத்து, ஆஸ்திரேலியா வெற்றிக்கு உதவினார்.
208
முதல் போட்டியில் 208 ரன் குவித்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘டி–20’ அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 2013, ராஜ்கோட் போட்டியில் இந்தியா 202/4 ரன் எடுத்திருந்தது.
* தவிர ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ‘டி–20’ போட்டியில், இந்திய அணி மூன்றாவது முறையாக (200/3, 202/4, 208/6) 200 ரன்னுக்கும் மேல் எடுத்தது.
2000
மொஹாலி போட்டியில் இந்திய அணியின் ராகுல், 37 ரன் எடுத்த போது, சர்வதேச ‘டி–20’ அரங்கில் 2000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இவர் 62 போட்டியில், 2 சதம், 18 அரைசதம் உட்பட 2018 ரன் எடுத்துள்ளார்.
சிறப்பான வரவேற்பு
நேற்று கோஹ்லி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். அடுத்து தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய வந்த போது, அதே அளவு உற்சாக குரல் எழுப்பி வரவேற்பு தந்தனர்.
208
முதல் போட்டியில் 208 ரன் குவித்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘டி–20’ அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 2013, ராஜ்கோட் போட்டியில் இந்தியா 202/4 ரன் எடுத்திருந்தது.
* தவிர ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ‘டி–20’ போட்டியில், இந்திய அணி மூன்றாவது முறையாக (200/3, 202/4, 208/6) 200 ரன்னுக்கும் மேல் எடுத்தது.
2000
மொஹாலி போட்டியில் இந்திய அணியின் ராகுல், 37 ரன் எடுத்த போது, சர்வதேச ‘டி–20’ அரங்கில் 2000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இவர் 62 போட்டியில், 2 சதம், 18 அரைசதம் உட்பட 2018 ரன் எடுத்துள்ளார்.
சிறப்பான வரவேற்பு
நேற்று கோஹ்லி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். அடுத்து தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய வந்த போது, அதே அளவு உற்சாக குரல் எழுப்பி வரவேற்பு தந்தனர்.