இரட்டை கோபுரம் தகர்ப்பு முதல் ட்ரோன் தாக்குதல் வரை ரத்த களறிக்கு மத்தியில் ஆப்கானை விட்டு வெளியேறியது அமெரிக்கா

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரட்டை கோபுரம் தகர்ப்பு முதல் ட்ரோன் தாக்குதல் வரை ரத்த களறிக்கு மத்தியில் ஆப்கானை விட்டு வெளியேறியது அமெரிக்கா

* துப்பாக்கி சூடு, பட்டாசு வெடித்து தலிபான்கள் கொண்டாட்டம்
* 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்தும் உயிர் அச்சத்தில் மக்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் ஒரு நாள் முன்னதாக வெளியேறின. அதனால், 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.

அமெரிக்க படைகள் வெளியேறியதால் காபூலில் தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர், தீவிரவாதிகளை போட்டுத் தள்ளுவதற்காக அடுத்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க படைகள் நுழைந்தன.

அதன்பின், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானை, தலிபான் தீவிரவாதிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் கைப்பற்றினர்.

அமெரிக்க அரசு நிர்வாகம் தங்களது படைகளை இன்றுக்குள் (ஆக.

31) வாபஸ் பெறுவதாக அறிவித்ததால், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுக்குள் படிப்படியாக கொண்டு வந்தனர். தலிபான்களுக்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆப்கானில் வசித்து வந்த வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் கடந்த 3 வாரங்களாக வெளியேற்றின.

தலிபான்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்களும் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கு நடந்த துயரங்களை உலகமே பார்த்துக் கொண்டு இருந்தது.

கிட்டதிட்ட 1. 5 லட்சம் பேர் ஆப்கானில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தலிபான் - அமெரிக்க படைகள் விவகாரம் ஒருபக்கம் இருக்க, ஐஎஸ்ஐஎஸ் - கே என்ற அமைப்பின் தீவிரவாத குழுக்கள், தலிபான்களுக்கு எதிராக செயல்படும் ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாண படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வந்தன. ஐஎஸ் தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்கர் உட்பட 170க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

அதன்பின் அமெரிக்கா நடத்திய பதிலடி ட்ரோன் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகளின் வாகனங்கள், முக்கிய தளபதிகள் சிலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர்.



இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுக்கான காலகெடு இன்றுடன் முடிவதால், நேற்றுடன் தனது கடைசி விமான சேவையை அமெரிக்கா முடித்துக் கொண்டது. காபூல் விமான நிலையத்தில் இருந்து கெடு விதிக்கப்பட்ட ஒரு நாள் முன்னதாக, அமெரிக்கா தனது கடைசி விமானமான ‘சி -17’-வுடன் நேற்று மாலை 3. 29 மணிக்கு புறப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தது.

ஆப்கானின் ஆபத்தான கட்டங்களில் இருந்து நாடு திரும்பிய வீரர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அவர் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகால ஆப்கான் ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.



ஆப்கானிஸ்தானில் இருந்து எவ்வித பாதிப்பும் இல்லாமல் மக்களை அழைத்து வந்த ராணுவ தளபதிகளுக்கு நன்றி கூறுகிறேன். கடந்த 17 நாட்களாக ராணுவ வீரர்கள் மிகப்பெரிய விமானப் பயணத்தை மேற்கொண்டனர்.

அவர்கள் 1,20,000க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வந்துள்ளனர். ஆப்கானில் வெளியேறிய மக்கள் பாதுகாப்பாக வாழ சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைப்பை கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

அமெரிக்க படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறியதால், காபூல் உள்ளிட்ட நகரங்களில் பட்டாசு வெடித்தும், வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும், வெடிகுண்டுகளை வானை நோக்கி வெடிக்க வைத்தும் தலிபான்களும், மக்களும் கொண்டாடினர்.

ஆனால், காபூல் மக்கள் விமான நிலையத்தின் மீது மற்றொரு தாக்குதல் நடந்திருக்கலாம் என்று அஞ்சினர்.

இருந்தும் தலிபான்கள் தரப்பில் வெளியிட்ட செய்தியில், ‘இது, கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு; காபூல் மக்கள் பயப்பட வேண்டாம். அமெரிக்க படைகள் சென்றுவிட்டன.

20 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்தது. இது வரலாற்று சிறப்புமிக்க தருணம்’என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் பிடியில் இருந்த காபூல் விமான நிலையம் இனி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாததால், இனிமேல் விமானப் போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஆப்கானில் தீவிரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்க ராணுவம் 2001ம் ஆண்டு முதல் 775 பில்லியன் டாலருக்கும் (இந்திய ரூபாயில் 5,680,94,37,500 = ரூ.

5,680 கோடி) மேலாக செலவு செய்துள்ளது. தற்போது, நேட்டோ மற்றும் அமெரிக்க படைகள் வெளியேறியதால், பல லட்சம் மக்களை கொன்று குவித்த 20 ஆண்டுகால ஆப்கான் போர் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இனி வரும் நாட்களில் தலிபான் தீவிரவாதிகள் தங்களது விருப்பப்படி ஆப்கானில் புதிய அரசை அமைக்க உள்ளார்கள்.

அந்த அரசு எப்படி இருக்கும்? என்று உலக நாடுகளே எதிர்பார்த்துக் கொண்டுள்ளன.

20 ஆண்டுகால போர் எப்படி நடந்தது?

* 2001 செப்.

11:
ஆப்கானிஸ்தானில் இருந்த  ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா, அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தை தகர்த்தியது.
இந்த தாக்குதலுக்காக நான்கு வர்த்தக விமானங்கள் கடத்தப்பட்டன.

அதில், இரண்டு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தையும், மற்றொரு விமானம், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் கட்டடத்தை தாக்கியது. நான்காவது விமானம், பென்சில்வேனியா வயல்வெளி பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர்.

* 2001 அக். 7:
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களான காபூல், கந்தஹார், ஜலாலாபாத் ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ள தாலிபன் மற்றும் அல் - கொய்தா இலக்குகளை அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்கின.



* 2001 நவ. 13:
அமெரிக்க கூட்டுப்படையுடன் சேர்ந்து, தலிபான்களுக்கு எதிராக செயல்படும் வடக்கு கூட்டணியும் தாக்குதல்களை நடத்தின.

இவர்கள் காபூலுக்குள் நுழைந்து தலிபான்களை விரட்டியடித்தனர்.

* 2004 ஜன. 26
‘லோயா ஜிர்கா’ என்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புதிய ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்டமானது.

அந்த அரசியலமைப்பு, 2004ம் ஆண்டு அக்டோபரில் அதிபர் தேர்தலை நடத்த வழிவகுத்தது.

* 2004 டிசம்பர் 7:
ஆப்கான் அதிபராக ஹமீத் கர்ஸாய் ேதர்வானார். இவர், தலிபான் எதிர்ப்பு குழுக்களை வழிநடத்தியவராவார்.



* 2006 மே 12:
பிரிட்டிஷ் படைகள் ஆப்கானின் தெற்கில் உள்ள தலிபான் கோட்டையான ஹெல்மண்ட் மாகாணத்திற்குள் நுழைந்தது. அவர்கள், புனரமைப்பு திட்டங்களுடன் தலிபான்களையும் அழித்து வந்தனர்.

அங்கு ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் படையினர் உயிரிழந்தனர்.

* 2009 பிப்ரவரி 17:
ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படும் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா ஒப்புதல் அளித்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து நாற்பதாயிரமாக உயர்ந்தது.

அவர்கள் நாட்டின் தென் பகுதியில் தீவிர போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

* 2011 மே 2:
அமெரிக்காவை சிதைத்த அல்-கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டான்.

பாகிஸ்தான் ராணுவ பயிற்சி மையத்தில் இருந்து, கிட்டதிட்ட ஒரு மைல் தூரத்துக்கும் குறைவான இடத்தில் பதுங்கியிருந்த பின்லேடன், அமெரிக்க கடற்படை அதிரடி வீரர்களால் கொல்லப்பட்டான். அவனது உடல் கடலில் தூக்கி வீசப்பட்டது.

சிஐஏ தலைமையிலான 10 ஆண்டுகால வேட்டை பின்லேடனை கொன்றதுடன் முடிவுக்கு வந்தது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ‘பாகிஸ்தான் நம்பமுடியாத கூட்டாளி’ என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது.

* 2013 ஏப்.

23:
தலிபான் தீவிரவாத அமைப்பின் நிறுவனரான முல்லா முகமது ஒமர் திடீரென இறந்தான். அவனது மரணம் கிட்டதிட்ட இரண்டு ஆண்டாக வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தனர்.

ஆப்கானிஸ்தான் உளவுத்துறையின்படி, முல்லா ஒமர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அதனை மறுத்தது.



* 2014 டிச. 28
முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரின் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.

அமெரிக்காவும் தங்களது படையினரின் எண்ணிக்கை குறைத்துக் கொண்டது. அங்கேயே தங்கி இருந்தவர்கள் ஆப்கன் ராணுவத்தினருக்கும், காவல்துறையினருக்கும் பயிற்சி கொடுத்து வந்தனர்.



* 2015 ஆக. 10:
படைகளின் வீரியம் குறைந்ததால், தலிபான்கள் மீண்டும் தங்களது தொடர் தற்கொலை படை தாக்குதல்கள், கார் குண்டுவெடிப்பு மற்றும் பிற தாக்குதல்களைத் தொடங்கினர்.

காபூலில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் குண்டூஸ் நகரம் மீது தாக்குதல் நடத்தினர். காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையம் தலிபான்களால் தாக்குதலுக்கு ஆளானது.



* 2019 ஜன. 25:
ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கனி 2014ல் அதிபரானதில் இருந்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்தார்.



* 2020 பிப். 29:
அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே, கத்தாரின் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி, 14 மாதங்களுக்குள் அனைத்து வெளிநாட்டுப் படைகளையும் திரும்பப் பெற அமெரிக்கா மற்றும் நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொண்டன.

* 2021 ஏப். 13:
2021ம் ஆண்டு செப்.

11ம் தேதிக்குள் அனைத்து அமெரிக்க படைகளும், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்தார்.

* 2021 ஆக. 16:
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால், அதிபர், அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

ஆப்கன் அரசுப் படையினரின், குறைந்தபட்ச எதிர்ப்பை மட்டுமே வெளிப்படுத்தினர். அதனால், தலிபான்கள் உயிர் சேதமின்றி ஆப்கானை தங்களுடைய வசமாக்கிக் கொண்டனர்.



* 2021 ஆக. 31:
ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகள் முழுவதையும் விலக்கிக் கொண்டதாக இன்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்தார்.



பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) நடத்திய அவசர கூட்டத்தில், இந்தியாவின் தற்போதைய தலைவர் தலைமை வகித்தார். அப்போது, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், ‘ஆப்கானை மையமாக கொண்டு ஒரு நாட்டை அச்சுறுத்துவது அல்லது தாக்குவது அல்லது தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஆகிய நடவடிக்கைகளில் மற்ற நாடுகள் ஈடுபடக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.

கத்தாருக்கு தூதரகம் மாற்றம்
அமெரிக்கா உட்பட 98 நாடுகள், தலிபான்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளன.

குறிப்பாக அமெரிக்கா தனது தூதரகத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தாரில் உள்ள தோஹாவுக்கு மாற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தனது ராணுவ இருப்பை முடிவுக்கு கொண்டுவந்தது மட்டுமின்றி, தொடர்ந்து ராஜதந்திர நடவடிக்கைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் ஒவ்வொருவருக்கும் உதவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

ஆப்கானில் அமைதியைப் பேணுவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்’ என்றார்.

கடைசி வீரரின் போட்டோ
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரரும், படைகளின்  மேஜர் ஜெனரலுமான கிறிஸ் டான்ஹூ என்று அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி அமெரிக்க  பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தியில், ‘காபூலில் அமெரிக்க படைகளின்  நடவடிக்கை முடிந்ததன் அடையாளமாக, கடைசி அமெரிக்க வீரராக மேஜர் ஜெனரல்  கிறிஸ் டான்ஹூ நேற்று சி-17 ரக விமானம் ஒன்றில் புறப்பட்டு உள்ளார்’ என்று  கூறியதுடன் அவர் ஆயுதங்களுடன், ராணுவ சீருடை அணிந்து வெளியேறும் புகைப்படம்  ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

ஜோ பிடனுக்கு
51% ஆதரவு இல்லை
ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் செய்தி  நிறுவனங்கள் அமெரிக்காவில் நடத்திய கருத்துக் கணிப்பில், ஆப்கானில் இருந்து  அமெரிக்கப் படைகள் வெளியேறிய விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,  அதிபர் ஜோ பிடனின் நடவடிக்கையை 51% பேர் ஆதரிக்கவில்லை. கிட்டதிட்ட  40%க்கும் குறைவான அமெரிக்கர்கள் மட்டுமே ஜோ பிடனின் நடவடிக்கையை  ஆதரிக்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



200 வீரர்கள் எப்ப வருவாங்க?
* கடைசியாக 5 அமெரிக்க ராணுவ விமானங்களில் மூலம் மக்கள் அழைத்து  வரப்பட்டனர். ஆனால், இன்னும் 200 அமெரிக்கர் மற்றும் ஆயிரக்கணக்கான  ஆப்கானிஸ்தான் மக்கள் காபூலில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.   இவர்கள், ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டுமானால், இனிமேல் தலிபான்களின்  அனுமதியை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


* அமெரிக்க படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிய நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நேற்றிரவு ஐக்கிய அரபு எமிரேட் தலைவர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் ராஜதந்திர ஆலோசகர் அன்வர் கர்காஷுடன் ஆலோசனை நடத்தினார்.
* ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டாக முகாமிட்டிருந்த அமெரிக்கா படைகள் வெளியேறிய அதே நாளில், காபூலில் உள்ள அரசுப் பள்ளியில் படிப்பதற்காக மாணவ, மாணவிகள் சென்றனர்.


* அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வெளியிட்ட செய்தியில், ‘ஆப்கான்  போரிலிருந்து ஜோ பிடன் நிர்வாகம் வெளியேறியது, மோசமான மற்றும் திறமையற்ற  செயல்பாட்டை காட்டுகிறது. அனைத்து ராணுவ உபகரணங்களையும் மீட்க வேண்டும்.   ஒருவேளை அவை திரும்ப ஒப்படைக்கப்படாவிட்டால், ராணுவப் படையுடன் சென்று  அவற்றை மீட்க வேண்டும்.

அல்லது அவர்கள் மீது குறைந்தபட்ச தாக்குதலை  நடத்தலாம்’ என்று தெரிவித்துள்ளார்.


.

மூலக்கதை