இணைகிறதா தயாரிப்பாளர்கள் சங்கம்

தினமலர்  தினமலர்
இணைகிறதா தயாரிப்பாளர்கள் சங்கம்

சென்னை:முரளி தலைமையிலான, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், டி.ராஜேந்திரன் துவக்கிய தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் இணைவதாக வெளியான தகவலை தொடர்ந்து சங்கத்தில் சர்ச்சை உருவாகியுள்ளது.

இரண்டு சங்கமும் இணைய உள்ளதாக தகவல் வெளியானதை, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலர் ஜே.எஸ்.கே.சதீஷ் மறுத்துள்ளார். அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கங்கள் இணைவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது வதந்தி. நாங்கள் தயாரிப்பாளர்கள் நலன்கருதி எடுக்கப்படும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு தந்து, அனைத்து சங்கத்தினருடனும் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

சிலம்பரசன் மீது நான்கு தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர். இதனால் பாதிப்பதும் தயாரிப்பாளர்களே.

முந்தைய நிர்வாகம், படப்பிடிப்பை நடத்திக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பர். ஆனால் இவர்கள் படப்பிடிப்பை, பெப்சி மூலம் நிறுத்தியுள்ளனர். பெப்சி ஏற்றுக் கொள்ளும் சங்கமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மட்டுமே உள்ளது. இதனால் மற்ற இரண்டு சங்கமும் பெப்சியுடன் பேசக்கூட முடியவில்லை.

இதனால் சங்கத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள் நலன் கருதி, சங்கத்தை இணைத்து, தயாரிப்பாளரின் ஒற்றுமையை பலப்படுத்த எண்ணினோம். சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் உள்ளனர். இன்றைய சூழலில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனித்து செயல்படுவது சவாலான விஷயம். தயாரிப்பாளர் நலன்கருதி அனைவரும் இணைந்து ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, சிலம்பரசன் மீது, மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகார் குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதை முன்னிட்டு, சிலம்பரசன் நடிக்க இருந்த, ‛நதிகளிலே நீராடும் சூரியன்' படப்பிடிப்புக்கு தற்காலிகமாக தடை உருவாகியுள்ளது. இதனால் நாளை துவங்க இருந்த படப்பிடிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தடைகளை கடந்து படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, சிலம்பரசனும் கோயிலே தவம் என இருக்கிறார்.

மூலக்கதை