ஈரோடு அ.தி.மு.க.,வில் 'ஈகோ' : தி.மு.க.,வுக்கு தாவும் நிர்வாகிகள்

தினமலர்  தினமலர்
ஈரோடு அ.தி.மு.க.,வில் ஈகோ : தி.மு.க.,வுக்கு தாவும் நிர்வாகிகள்

மாநில, மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பு இல்லாததால், ஈரோடு அ.தி.மு.க.,வினர், தி.மு.க.,வுக்கு தாவி வருகின்றனர்.

கொங்கு மண்டலமும், அதில் உள்ள ஈரோடு மாவட்டமும் எப்போதும் அ.தி.மு.க.,வின் கோட்டை. 1991ல் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் இருந்ததால், காங்கேயத்தில் ஜெயலலிதா போட்டியிட்டார். அப்போது அவர் பர்கூரிலும் வெற்றி பெற்றதால், காங்கேயம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, ஆர்.எம்.வீரப்பனை போட்டியிட வைத்தார்.

இம்மாவட்டத்துக்கு உட்பட்ட ஈரோடு - முத்துசாமி, கோபி - செங்கோட்டையன், தாராபுரம் - ஈஸ்வரமூர்த்தி, வெள்ளக்கோவில் - துரை ராமசாமி, காங்கேயம் - வீரப்பன் என ஐந்து அமைச்சர்கள் உலா வந்தனர்.ஜெயலலிதா இருந்தபோது, ஒன்றிய அளவில் பிரச்னை என்றால் கூட, உடன் அழைத்து பேசுவார். அ.தி.மு.க.,வில் இருந்து முத்துசாமி, தி.மு.க.,வுக்கு செல்கிறார் என அறிந்ததும், ஜெயலலிதா நேரடியாக 'முத்துசாமி தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படும்' என, அழைப்பு விடுத்தார்.

கடந்த 2011ல் பவானிசாகர், இந்திய கம்யூ., வசமும், ஈரோடு கிழக்கு தொகுதி, அ.தி.மு.க., ஆதரவுடன் தே.மு.தி.க., வசமும், மற்ற ஆறு தொகுதிகள் அ.தி.மு.க., வசமும் இருந்தன. 2016ல், எட்டு தொகுதியும், அ.தி.மு.க., வசமானது.ஜெயலலிதா மறைவுக்குப் பின் மாநில தலைமைக்கும், ஈரோடு மாநகர மாவட்ட செயலர் ராமலிங்கம், புறநகர் மாவட்ட செயலர் கருப்பணன் ஆகியோரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், அ.தி.மு.க.,வினர் சோர்வடைந்தனர்.

இதனால் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, அந்தியூர் என மூன்று தொகுதிகளை அ.தி.மு.க., இழந்தது.இம்மாவட்ட அமைச்சர்களாக இருந்த செங்கோட்டையன், கருப்பணன், மாநகர மாவட்ட செயலராக ராமலிங்கம் ஆகியோர் இருந்தாலும், அவர்களை சுற்றி தலா 10 பேர் மட்டுமே பதவி சுகத்தையும், பலனையும் அனுபவித்தனர்.
தலைமைக்கு புகார்கள் சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கட்சியில் பலர் ஓரங்கட்டப்பட்டனர்.

அடுத்தடுத்து வரும் தேர்தல்களில், பா.ஜ., இம்மாவட்டத்தில் வலுப்பெறும் என்ற நம்பிக்கையில் அரசியல் கட்சியினர் உள்ளனர். இதனால், தி.மு.க.,வுடன் போட்டி போடும் தகுதியை அ.தி.மு.க., இழப்பதுடன், பா.ஜ.,வுக்கு அந்த வாய்ப்பு போய்விடும் என்பதே நிதர்சனம்.
- நமது நிருபர் -

மூலக்கதை