நுழைவு வரி தொடர்பாக விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு ஐகோர்ட் இடைக்கால தடை

தினமலர்  தினமலர்
நுழைவு வரி தொடர்பாக விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சொகுசு காருக்கான நுழைவு வரி தொடர்பான வழக்கில் விஜய்க்கு விதித்த ரூ.1 லட்சம் அபராத தொகைக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இதற்கான வரியை அவர் செலுத்திய போதிலும், நுழைவு வரியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வரி என்பது அரசுக்கு கட்டாயம் செலுத்த வேண்டும். நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என கண்டனம் தெரிவித்ததோடு, விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், அந்த தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூகவலைளதங்களில் காரசாரமான விவாதங்கள் நடந்தன. இந்நிலையில் இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார் விஜய். அதாவது, தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தன்னைப்பற்றி தீர்ப்பில் கூறிய விமர்சனங்களை நீக்கம் வேண்டும் என தனது மனுவில் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் வாதிட்ட வக்கீல், ‛‛விஜய் ஏற்கனவே 20 சதவீதம் நுழைவு வரி செலுத்தி விட்டார். மீதி தொகையையும் செலுத்த தயாராக உள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை நீக்க வேண்டும், அவர் மீதான விமர்சனங்களையும் நீக்க வேண்டும் என முன் வைத்தார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், விஜய் வரியை செலுத்தினால் போதும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே தனி நீதிபதி சுப்ரமணியம் பிறப்பித்த ரூ.1 லட்சம் அபராத தொகை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அதோடு மீதமுள்ள வரியை விஜய் ஒரு வாரத்திற்குள் செலுத்தவும் உத்தரவிட்டனர்.

மூலக்கதை