‘பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பலன் அனைவருக்கும் சமமானதாக இல்லை’

தினமலர்  தினமலர்
‘பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பலன் அனைவருக்கும் சமமானதாக இல்லை’

புதுடில்லி:இந்தியாவின், முப்பது ஆண்டு கால பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பலன், குடிமக்களுக்கு சமச் சீரற்ற வகையில் தான் கிடைத்துள்ளது என, முகேஷ் அம்பானி தெரிவித்து உள்ளார்.

இந்தியா தாராளமயமாக்கலை அறிமுகம் செய்து, 30 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், நாளிதழ் ஒன்று கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார், முகேஷ் அம்பானி. அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளதாவது:இந்தியா, 1991ல் பற்றாக்குறை பொருளாதாரத்தில் இருந்து, 2021ல் போதுமான பொருளாதாரமாக மாற்றம் பெற்றுள்ளது.

அடுத்து, 2051க்குள் நிலையான, அனைவருக்கும் சமமான செழிப்பு நிறைந்த பொருளாதாரமாக மாற வேண்டும்.இந்திய அரசு, 1991ல் சீர்திருத்த நடவடிக்கைகள் வாயிலாக, ‘லைசன்ஸ் கோட்டா ராஜ்’ நிலையை முடிவுக்கு கொண்டு வந்தது. வர்த்தகம் மற்றும் தொழிற்கொள்கையை தாராளமயமாக்கியது. மூலதன சந்தைகளையும் நிதித் துறையையும் அது விடுவித்தது.இந்த சீர்திருத்த நடவடிக்கைகள், இந்தியா, உலகத்தில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர வழிவகுத்தது.

மக்கள் தொகை 88 கோடியிலிருந்து, 138 கோடியாக உயர்ந்தபோதும், வறுமை விகிதம் பாதியாக குறைந்தது.ஒரு தொலைபேசி அல்லது எரிவாயு இணைப்பைப் பெறுவதற்கு மக்கள் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. வணிகங்கள் கணினி வாங்க, அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது என்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாதது.முக்கிய உள்கட்டமைப்புகள் நம்ப முடியாத வளர்ச்சியை பெற்றன.

நம் விமானநிலையங்கள், துறைமுகங்கள் தற்போது உலக தரத்தில் உள்ளன. அதே போலவே நமது தொழில் மற்றும் சேவைகளும்.கடந்த முப்பது ஆண்டுகளாக நாம் செய்த சாதனைகள் மூலம், பெரிதாக கனவு காணும் உரிமையை நாம் பெற்றுள்ளோம். உலகளவில் செழிப்பான நாடுகளில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இணையாக, மூன்றாவதாக நம் நாட்டை உயர்த்தி, 2047ம் ஆண்டில், நம் சுதந்திரத்தின் துாற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம் என்பதை விட நம் பெரிய கனவாக, எது இருக்க முடியும்!

இதுவரையிலான பொருளாதார சீர்திருத்தங்களின் பலனை இந்தியர்கள் சமமாக பெறவில்லை. அதனால், பொருளாதாரத்தின் அடித்தட்டு மக்கள் செல்வத்தை உருவாக்கும் வகையில், இந்தியாவின், ‘வளர்ச்சிக்கான மாடல்’ இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை