பெகாசஸ் மென்பொருளால் லட்சக்கணக்கான மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர்: என்எஸ்ஓ

தினமலர்  தினமலர்
பெகாசஸ் மென்பொருளால் லட்சக்கணக்கான மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர்: என்எஸ்ஓ

ஜெருசலேம்: பெகாசஸ் மென்பொருள் காரணமாக உலகம் முழுவதும் லட்சகணக்கான மக்கள் நிம்மதியாக தூங்குகின்றனர்; தெருக்களில் பாதுகாப்பாக நடக்கின்றனர் என மென்பொருளை தயாரித்த என்எஸ்ஓ குழுமம் கூறியுள்ளது.

மேற்காசியாவின் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., குழுமம், பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த மென்பொருள் வாயிலாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உட்பட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் பல நாடுகளை சேர்ந்தவர்களின் மொபைல் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இந்த விவகாரம் தொடர்பாக என்எஸ்ஓ குழுமத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: பெகாசஸ் தொழில்நுட்பம் உள்ளதால், உலகம் முழுவதும் லட்சகணக்கான மக்கள் நிம்மதியாக தூங்குகின்றனர். தெருக்களில் பாதுகாப்பாக நடக்கின்றனர். இந்த தொழில்நுட்பம் உலகெங்கிலும் உள்ள புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு குற்றங்கள், பயங்கரவாத சம்பவங்களை தடுக்கவும், விசாரிக்கவும் உதவுகிறது. இதே போன்ற தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் விசாரணை அமைப்புகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு உதவும்.

என்எஸ்ஓ மற்றும் அதேபோல் உலகில் உள்ள சைபர் தொழில்நுட்ப நிறுவனங்கள், சைபர் உளவுத்துறை கருவிகளை அரசுகளுக்கு அளிக்கின்றன. இதற்கு, சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி அனுப்பும் செயலிகள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க உரிய வழிமுறைகள், விசாரணை அமைப்புகளிடம் இல்லாததே காரணம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் இயக்குவது இல்லை. எந்த தரவுகளையும் நாங்கள் சேமிப்பது கிடையாது. பாதுகாப்பான உலகத்தை உருவாக்க எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை