வர்த்தக வெளிப்படைத் தன்மையில் இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள்
புதுடில்லி:‘டிஜிட்டல்’ மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த உலகளாவிய ஆய்வில், 90.32 சதவீத மதிப்பெண்ணுடன், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.
மேலும், வெளிப்படைத் தன்மை குறித்த விஷயத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின், ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தன்னுடைய உலகளாவிய ஆய்வின் முடிவில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஆணையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகின் 143 நாடுகள் குறித்த மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை, நடைமுறைகள், நிறுவன ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பு, காகிதமற்ற வர்த்தகம் மற்றும் பிற நாடுகளுக்கு இடையேயான காகிதமற்ற வர்த்தகம் ஆகிய ஐந்து முக்கிய விஷயங்களிலும், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.
டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த உலகளாவிய ஆய்வில், இந்தியா கடந்த 2019ம் ஆண்டில், 78.49 சதவீத மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டில், 90.32 சதவீத மதிப்பெண் பெற்று உள்ளது. வெளிப்படைத் தன்மை குறித்த விஷயத்தில், இந்தியா 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது.
2019ல் இது, 93.33 சதவீதமாக இருந்தது.காகிதமற்ற வர்த்தகத்தில் 96.3 சதவீதமும், நிறுவன ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பில் 88.89 சதவீதமும் பெற்றுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த ஆய்வு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுவதாகும்.அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த ஆய்வில் நேரடியான விளைவுகளை ஏற்படுத்தி, முன்னேற்றத்தை எடுத்துக் காட்டி உள்ளது என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.