சீன அதிபர் ஷீ ஜின்பிங் திபெத்துக்கு ரகசிய வருகை

தினமலர்  தினமலர்
சீன அதிபர் ஷீ ஜின்பிங் திபெத்துக்கு ரகசிய வருகை

பீஜிங்:அருணாச்சல பிரதேச எல்லைக்கு மிக அருகே அமைந்துள்ள திபெத்துக்கு சொந்தமான நயிங்சி நகருக்கு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் சமீபத்தில் முதல்முறையாக வருகை புரிந்தார்.

இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள திபெத், சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது. கடந்த 1951ல் சுதந்திரம் பெற்றுவிட்டதாக திபெத் அறிவித்தாலும், அந்த பகுதி தங்கள் கட்டுப் பாட்டில் இருப்பதாக சீனா தொடர்ந்து தெரிவித்து வருகிறது.மத்திய அரசு மறுப்புமத ரீதியாக சீனா தங்களை ஒடுக்கி வருவதாகவும், கலாசாரத்தை அழித்து வருவதாகவும் சீனாவால் நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்கள் குற்றஞ்சாட்டினர்.

நம் நாட்டின் அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டி திபெத் அமைந்துள்ளதால், அது தெற்கு திபெத்துக்கு சொந்தமான பகுதி என சீனா உரிமை கொண்டாடியது. இதை, மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

நம்பிக்கை



இந்நிலையில் சீன அதிபராக ஷீ ஜின்பிங் 2013ல் பதவி ஏற்ற பின், முதல் முறையாக சமீபத்தில் திபெத் வந்தார்.அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள நயிங்சி நகரத்திற்கு 21ல் வருகை புரிந்தார். அங்கு பிரம்மபுத்ரா ஆற்றின் மேல் அமைந்துள்ள நயாங் ஆற்றுப் பாலத்தையும், சுற்றுச்சூழல் பராமரிப்பையும் பார்வையிட்டார்.திபெத்தின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப் படும் நயிங்சி மக்களிடம், ஜின்பிங் உரையாற்றினார்.'திபெத்தில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் மகிழ்ச்சியான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில், உங்களை போலவே எனக்கும் நம்பிக்கை உள்ளது' என்றார்.

ரயில் சேவை

திபெத் தலைநகர் லாஸாவில் இருந்து நயிங்சி நகர் வரை, 'புல்லட்' ரயில் சேவையை ஜூனில் சீனா துவக்கியது. நயிங்சி ரயில் நிலையம் சென்ற அதிபர் ஜின்பிங், புல்லட் ரயில் வாயிலாக லாஸா வரை பயணித்தார். லாஸாவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு, நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார். சீன அதிபர் திபெத் வந்து திரும்பும் வரை இந்த பயணம் குறித்த தகவலை சீன அரசு ரகசியமாகவே வைத்திருந்தது.

மூலக்கதை