வெந்த புண்ணில்... வேல் பாய்ச்சலாமா? இஎஸ்ஐ., ல் உயர் சிகிச்சை பெற சிக்கல்...... விதிமுறையில் தளர்வு ஏற்படுத்தலாமே!

தினமலர்  தினமலர்
வெந்த புண்ணில்... வேல் பாய்ச்சலாமா? இஎஸ்ஐ., ல் உயர் சிகிச்சை பெற சிக்கல்...... விதிமுறையில் தளர்வு ஏற்படுத்தலாமே!

திருப்பூர் : இ.எஸ்.ஐ.,ல், உயர் சிகிச்சை பெறமுடியாத நிலை ஏற்படுவதால், குறைந்தபட்ச பணி நாள் விதிமுறைகளை தளர்த்த வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த, கடந்த 2020ல், மார்ச் மாதம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நிறுவனங்கள் மூடப்பட்டதால், தொழிலளர் வேலை இழந்தனர். கடன் திருப்பி செலுத்த அவகாசம் உட்பட பல்வேறு சலுகைகளை அறிவித்த மத்திய அரசு, இ.எஸ்.ஐ.,ல் சிகிச்சை பெறுவதற்கான விதிமுறையையும் தளர்த்தியது.ஆறு மாதங்களில் 78 நாட்கள் தொழிலாளர் பணிபுரியாதபோதும், நடப்பு 2021 ம் ஆண்டு, ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களில் இ.எஸ்.ஐ.,ல் உயர் சிகிச்சை அனுமதிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி, ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர்.

வேலை இழப்பு : நடப்பாண்டில், மே, ஜூன் மாதத்தில், கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்தது. திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி முழுமையாக முடங்கியதால், இந்த துறை சார்ந்து மட்டும் எட்டு லட்சம் தொழிலாளர் வேலை இழப்பை சந்தித்தனர்.ஆனாலும், கடந்த ஜன., முதல் ஏப்., மாதம் வரை, ஊரடங்கு இல்லாததால், நடப்பு ஆண்டு, இ.எஸ்.ஐ.,ல் சிகிச்சை பெறுவதற்கான விதிகளை அரசு தளர்த்தவில்லை. கொரோனா முதல் அலை ஏற்படுத்திய உடல் நல பாதிப்பு, முதல் அலைக்குப்பின் வேலை இழப்பு, புதிதாக உருவான உடல் நல கோளாறு உட்பட பல்வேறு காரணங்களால், கடந்த ஆறு மாதங்களில், பல தொழிலாளர்களால், 78 நாட்கள் பணிபுரிய முடியவில்லை.தளர்வு வேண்டும்.

இத்தகைய தொழிலாளர்கள், உயர் சிகிச்சை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலைக்குப்பின், தமிழகத்தில் தற்போதுதான் நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன. இரண்டு மாதமாக வேலை இல்லாததால், வருவாய் இன்றி, பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெருக்கடியான இச்சூழலில், சிகிச்சை பெற முடியாதது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது, எனவே, குறைந்தபட்ச பணி நாட்களில் தளர்வு அளித்து, அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிடவேண்டும்.

மூலக்கதை