ஆய்வு-அரசின் விதிமுறை மீறப்படுகிறதா என கலெக்டர்சுருக்குமடி வலை பிரச்னையால் அதிரடி நடவடிக்கை..-

தினமலர்  தினமலர்
ஆய்வுஅரசின் விதிமுறை மீறப்படுகிறதா என கலெக்டர்சுருக்குமடி வலை பிரச்னையால் அதிரடி நடவடிக்கை..

.கடலுார்-அரசு தடையை மீறி சுருக்குவலை மற்றும் இழுவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கப்படுகிறதா என, கடலுக்குள் படகில் சென்று கலெக்டர் பாலசுப்ரமணியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

சுருக்கு வலையை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி 5 நாட்டிக்கல் மைல்களுக்குள் விசைப்படகை மீன்பிடிக்க பயன்படுத்துவது, இழுவலையின் மடிப்பகுதியில் 40 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணியளவு கொண்ட இழுவலைகளை பயன்படுத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. சுருக்குமடி வலை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலுாரில் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2ம் தேதி மீன் வளத்துறை அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு, அதிகாரியிடம் மனு அளித்தனர். மேலும் படகுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து 17ம் தேதி தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடலுார் மட்டுமின்றி, விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 19 ம் தேவனாம்பட்டினம் மற்றும் ராசாப்பேட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த நிலையில், மீனவப் பெண்கள் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் பாலசுப்ரமணியம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். சுருக்குமடி வலை பிரச்னை ஒருபுறமிருக்க, தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அமல்படுத்த மீன்வளத் துறை அதிகாரிகள் ரோந்து பணியும், இயந்திரமயமாக்கப்பட்ட இழுவலை விசைப்படகுகளில் வலைகளின் மடிப்பகுதியின் கண்ணியளவு மற்றும் விசைப்படகு இயந்திரத்தின் குதிரைத்திறன் குறித்து ஆய்வு செய்து, விதிமுறை மீறிய நுாற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு சம்மன் வழங்கினர். இதனால் ஆத்திரமடைந்த ஐ.பி.,விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் மீனவர்கள் முதுநகரில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்திற்கு வந்து, புதிய சட்டத்தை தளர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். எனவே, கடலுாரில் சுருக்குமடி வலை பிரச்னை மற்றும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி இழுவலை தடை உள்ளிட்ட பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நேற்று காலை கலெக்டர் பாலசுப்ரமணியம் அதிகாரிகளுடன் கடலுார் மீன்பிடி துறைமுகம் சென்று, அங்கு சுருக்குவலை பயன்படுத்தப்படுகிறதா, இயந்திரமாக்கப்பட்ட இழுவலை விசைப்படகுகளில் வலைகளின் மடிப்பகுதியின் கண்ணியளவு மற்றும் விசைப்படகு இயந்திரத்தின் குதிரைத்திறன் குறித்தான ஆய்வு மேற்கொண்டார்.

பின், அதிகாரிகளுடன் படகில் கடலுக்குள் சென்றார். கடலில் மீன்பிடி படகுகளில் விதிமுறை மீறப்படுகிறதா என, ஆய்வு செய்தார். பரங்கிப்பேட்டை முடசல் ஓடை வரையில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அவருடன் கூடுதல் கலெக்டர்கள் ரஞ்ஜித்சிங் (வருவாய்), பவன்குமார் ஜி கிரியப்பனவர் (வளர்ச்சி), ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், தாசில்தார் பலராமன் மற்றும் அதிகாரிகள் சென்றனர். கலெக்டர் நேரடியாக படகு மூலம் கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலக்கதை