ம.தி.மு.க., -பொது செயலராகிறார் வைகோ மகன் வையாபுரி?

தினமலர்  தினமலர்
ம.தி.மு.க., பொது செயலராகிறார் வைகோ மகன் வையாபுரி?

ம.தி.மு.க., பொதுச்செயலர் பதவி வழங்குவதன் முன்னோட்டமாக, காலியாக உள்ள துணை பொதுச் செயலர் பதவிக்கு, வையாபுரி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ம.தி.மு.க., துணைப் பொதுச்செயலர்கள் நாசரேத் துரை, தஞ்சாவூர் துரைபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தனர்.
அவர்கள் வகித்த வந்த பதவிக்கு, அக்கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது.

ம.தி.மு.க., உயர்நிலைக்குழு உறுப்பினர் புலவர் செவந்தியப்பன், கன்னியாகுமரி மாவட்ட செயலர் வெற்றி உள்ளிட்ட நிர்வாகிகள் அப்பதவியை எதிர்பார்க்கின்றனர்.ஆனால், பொதுச் செயலர் வைகோவின் மகன் வையாபுரிக்கு, துணைப்பொதுச் செயலர் பதவி வழங்க வேண்டும் என, மாவட்டச் செயலர்கள் சிலர் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

வைகோவின் உடல் நலம் கருதி, அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பட்சத்தில், அவர் வகித்து வரும் பொதுச் செயலர் பதவியை வையாபுரி தான் ஏற்க வேண்டும். அதற்கு முன்னோட்டமாக, துணை பொதுச் செயலராக வையாபுரியை நியமித்து, அரசியல் பாடத்தை வைகோ கற்றுத்தர வேண்டும் என, கட்சியினர் விருப்பம்தெரிவித்துள்ளனர்.

அரசியலை விரும்பாமல் ஒதுங்கி இருந்த வையாபுரி, தொண்டர்களின் வற்புறுத்தலால், சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்தார். தற்போது அவருயை படங்கள் பேனர், போஸ்டர்களில், வைகோவுக்கு இணையாக போடப்பட்டு வருகிறது.முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், வாழ்த்து தெரிவித்த வையாபுரி, அவருக்கு நெருக்கமானார். வைகோ பங்கேற்க முடியாத கட்சியினரின் இல்ல விழாக்களில் வையாபுரி பங்கேற்று வருகிறார். எதிர்காலத்தில், கட்சியின் பொதுச் செயலர் பதவியை நோக்கி, வையாபுரியின் அரசியல் நகர்வுகள் நிகழ்ந்தாலும் ஆச்சரியமில்லை என, ம.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். - நமது நிருபர் -

மூலக்கதை