நடிகையுடன் 5 ஆண்டு குடும்பம் நடத்தி ஏமாற்றிய வழக்கு; அதிமுக மாஜி அமைச்சர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நடிகையுடன் 5 ஆண்டு குடும்பம் நடத்தி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். இவருக்கு எதிராக கடந்த வாரம் துணை நடிகை சாந்தினி, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார்.
அதில், அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற தன்னை மணிகண்டன் கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்க செய்தார்.
தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தலைமறையான மணிகண்டன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை சாந்தினி அளித்துள்ளார்.
சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக நடிகை செயல்பட்டு வருகிறார்.
ஆரம்பகட்ட விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் தனக்கு எதிராக அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில், மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சாந்தினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், முதல் மனைவியிடம் சட்டப்படி விவாகரத்து பெற்று, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததால் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றோம்.
சட்டப் பேரவைக்கு பார்வையாளராக மனைவி என்ற அடிப்படையிலேயே அழைத்துச் சென்றார். மூன்று முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார்.
பணம் பறிக்க இந்த குற்றச்சாட்டை கூறியதாக அவர் தெரிவித்துள்ளது முழுக்க முழுக்க பொய். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் விசாரணையை ஜூன் 9ம் தேதிவரை மணிகண்டனை போலீசார் கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜான் சத்தியன் வாதிடும்போது, மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளார். எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல் முனியப்பராஜ் முன்ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
.