2ம் தவணையாக கொரோனா நிவாரண உதவி; ஆழ்வார்பேட்டை, நந்தனம் ரேஷன் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு: பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
2ம் தவணையாக கொரோனா நிவாரண உதவி; ஆழ்வார்பேட்டை, நந்தனம் ரேஷன் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு: பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கினார்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக ரூ. 2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் இன்று 2வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனத்தில் உள்ள ரேஷன் கடைகளில் முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று காலை திடீரென ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் பிறந்த நாளில் ரூ. 4000 வழங்கப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.

அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும், கொரோனா நிவாரண தொகை முதல் தவணையாக ரூ. 2000 கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 2வது தவணையாக 2 கோடியே 10 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் நேற்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தொற்று பரவல் உள்ள நிலையில், ரேஷன் கடைக்கு ஒரு நாளைக்கு 75 முதல் அதிகப்பட்சமாக 200 பேர், கொரோனா நிவாரண தொகை மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை வாங்கி செல்லும் வகையில் ஏற்கனவே டோக்கன் விநியோகிக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

2வது நாளாக இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் தலா ரூ. 2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமை செயலகம் புறப்பட்டார்.



அப்போது திடீரென ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ரேஷன் கடை அருகே, தனது காரை நிறுத்தி, அந்த ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது அங்கு நிவாரண பொருட்கள் வாங்க வந்தவர்கள் முதல்வரை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரேஷன் கடைக்கு சென்ற முதல்வர் மு. க. ஸ்டாலின், வரிசையில் நின்ற பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகையான ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை அவரே வழங்கினார். பின்னர், ரேஷன் கடையில் இதுவரை நிவாரண பொருட்கள் வாங்கி சென்றவர்களின் பட்டியல் அடங்கிய பதிவேட்டை ஆய்வு செய்தார்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களிடம் வணக்கம் கூறிவிட்டு, மு. க. ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

அப்போது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல், இன்று காலை திடீரென ஆழ்வார்பேட்டை ரேஷன் கடையை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்ததை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.

இதைத் தொடர்ந்து சென்னை நந்தனம் லாயிட்ஸ் காலனியில் உள்ள ரேஷன் கடையிலும் முதல்வர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

.

மூலக்கதை