முதல் காலாண்டில் ஏற்றுமதி 70.1 சதவீதம் அதிகரிக்கும்
புதுடில்லி : நாட்டின் மொத்த வணிக ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 70.1 சதவீதம் உயர்ந்து 6.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியான ‘எக்ஸிம்’ வங்கி தெரிவித்து உள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், எண்ணெய் அல்லாத பொருட்கள் ஏற்றுமதி 68.5 சதவீதமாக உயர வாய்ப்புஇருக்கிறது.இந்த ஏற்றுமதி உயர்வுக்கு, பல காரணங்கள் அடிப்படையாக இருக்கின்றன. முதலாவது, கடந்த ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதி மிக குறைவாகவே இருந்தது. அதனால், ஒப்பீட்டு அளவில் இப்போது மிகவும் அதிகரிப்பதாக தெரிகிறது. அடுத்து, உலகளவிலான கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததும், இந்த உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கிறது.
மூன்றாவதாக, வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து, தேவைகள் உயர்ந்ததும் ஒரு முக்கியமான காரணமாகும்.கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம், கடந்த ஏப்ரலில் மிகவும் அதிகமாக இருந்தது, ஏற்றுமதியை ஓரளவு பாதித்துள்ளது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.