ரெம்டெசிவிர்,வென்டிலேட்டருக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு.. கொரோனா தடுப்பூசி மீதான வரியை குறைக்க ஒன்றிய அரசு மறுப்பு!!

தினகரன்  தினகரன்
ரெம்டெசிவிர்,வென்டிலேட்டருக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு.. கொரோனா தடுப்பூசி மீதான வரியை குறைக்க ஒன்றிய அரசு மறுப்பு!!

டெல்லி : கருப்பு பூஞ்சை நோய்க்கு அளிக்கப்படும் ஆம்போடெரிசின்- பி மருந்துக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், கருப்பு பூஞ்சை நோய்க்கு கொடுக்கப்படும் ஆம்போடெரிசின் பி மருந்து ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. tocilizumab மருந்துக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று அறிவித்தார்.கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து , மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர், கொரோனா பரிசோதனை கிட், பல்ஸ் ஆக்சிமீட்டர், வெண்டிலேட்டர் மாஸ்க் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுவதாக அறிவித்தார். அதே போல சானிடைசர், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி 18%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுவதாகவும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28%ல் இருந்து 12% ஆக குறைக்கப் படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.மேலும், கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் மீதான இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு வரும் செப்டம்பர் மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.இதனிடையே தடுப்பூசி மீதான சரக்கு, சேவை வரியை குறைக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசி மீதான 5%ஜிஎஸ்டி  வரி தொடரும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை