வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்துக்கு புதிய வகை கொரோனா தொற்று

தமிழ் முரசு  தமிழ் முரசு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்துக்கு புதிய வகை கொரோனா தொற்று

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்துக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவியுள்ளது.

தினமும் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் பார்வையாளர்களுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ந்தேதி பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு தொடர் இருமல், சளி இருப்பது தெரியவந்தது.

இதனால், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ குழுவினர் உடல் சோர்வுடன் காணப்பட்ட சிங்கங்களின் சளி மாதிரிகளை சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபலில் உள்ள ஐ. சி. ஏ. ஆர். உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.



இந்த பரிசோதனை முடிவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 வயது உடைய நீலா என்ற பெண் சிங்கம் இறந்துவிட்டது.

கவிதா (23), புவனா (19) என்ற 2 பெண் சிங்கங்களின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்து வருகிறது. பூங்காவில் உள்ள 4 வங்கப்புலிகள் மற்றும் 3 சிங்கங்களின் சளி மாதிரிகள் எடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஐ. சி. ஏ. ஆர்.

உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர். இதில் 19 வயது உடைய ராகவ் என்ற ஆண் சிங்கம் சார்ஸ் கோவிட்-2, டிஸ்டெம்பர் என்ற புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அந்த சிங்கத்தை தனிமைப்படுத்தி தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த புதிய வகை தொற்று பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு பரவாமல் இருப்பதற்காக பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புதிய வகை சார்ஸ் கோவிட்-2 டிஸ்டெம்பர் தொற்று வயது முதிர்ந்த விலங்குகளை விட, இளம் வயதுடைய விலங்குகளை அதிக அளவில் தாக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு இந்த புதிய வகை தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் குழுவினர் பூங்கா நிர்வாகத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

.

மூலக்கதை