இலங்கை எதிரான கிரிக்கெட் தொடர்: ஜூன் 14 ம் தேதி முதல் 14 நாட்கள் தனிமையில் இந்திய வீரர்கள்..!

தினகரன்  தினகரன்
இலங்கை எதிரான கிரிக்கெட் தொடர்: ஜூன் 14 ம் தேதி முதல் 14 நாட்கள் தனிமையில் இந்திய வீரர்கள்..!

டெல்லி: இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள், ஜூன் 14 ஆம் தேதி முதல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடை திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணியில் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த சூழலில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்தது. இதன்படி இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் நியமனம் செய்யப்பட்டனர்.   இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினர் மும்பையில் இருக்கும் ஹோட்டலில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கின்றனர். இந்திய அணியினர் தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கும் காலங்களில் அவர்களுக்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்பு ஜூன் 28ம் தேதி மும்பையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இந்திய அணியினர், அங்கு 7 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பின்பு பயிற்சிகளை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை