சீனாவில் மீண்டும் தலைகாட்டும் கோவிட்: புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி

தினமலர்  தினமலர்
சீனாவில் மீண்டும் தலைகாட்டும் கோவிட்: புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி

பீஜிங்: சீனாவில் வூஹான் மாகாணத்தில், கடந்த 2019ம் ஆண்டு இறுதியில், கோவிட் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சில மாதங்களில், கோவிட் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக சீனா அறிவித்தது. ஆனால், 19 மாதங்களுக்கு மேலாகியும் இந்த பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் விடுபடவில்லை. குறிப்பாக, பெருந்தொற்றின் 2வது மற்றும் 3வது அலையால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கோவிட் தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 22 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் தொற்று பரவி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது.



இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை 91,394 ஆக உயர்ந்துள்ளது; இதுவரை 4,636 பேர் உயிரிழந்து உள்ளனர். இது தவிர நேற்று ஒரே நாளில், 27 பேருக்கு அறிகுறி இல்லாத தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை