கலைந்து போன கேப்டன் கனவு * யுவராஜ் சிங் சோகம் | ஜூன் 10, 2021
புதுடில்லி: ‘‘கடந்த 2007ல் இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்யப்படுவேன் என எதிர்பார்த்தேன்,’’ என யுவராஜ் சிங் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் ‘ஆல் ரவுண்டர்’ யுவராஜ் சிங். கடந்த 2011 உலக கோப்பை தொடரின் ‘தொடர் நாயகன்’. இவர் கூறியது:
கடந்த 2007 ஒருநாள் உலக கோப்பை தொடரில் மோசமாக தொற்று வெளியேறிய நேரம். இந்திய கிரிக்கெட்டில் மோசமான சூழல் நிலவியது. அடுத்து இரண்டு மாத இங்கிலாந்து பயணம், தென் ஆப்ரிக்க தொடர், பின் 2007 ‘டுவென்டி–20’ உலக கோப்பை என வரிசையாக நான்கு மாதங்கள் அன்னிய மண்ணில் இந்திய அணி விளையாட வேண்டியது இருந்தது. இதனால் சீனியர் வீரர்கள் ஓய்வு எடுக்க விரும்பினர்.
‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரை அவர்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் உலக கோப்பை தொடரில் என்னை கேப்டனாக தேர்வு செய்வர் என எதிர்பார்த்தேன். ஆனால் தோனியை கேப்டனாக அறிவித்தனர். அணியின் கேப்டன் யார் என்பதெல்லாம் கவலையில்லை. டிராவிட், கங்குலி என யாராக இருந்தாலும் சரி, 100 சதவீத ஆதரவு கொடுக்க விரும்பினேன். அதை ஓய்வு பெறும் வரை செய்தேன்.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.