ஐ.நா., பொதுச் சபையில் இந்தியருக்கு முக்கிய பதவி

தினமலர்  தினமலர்
ஐ.நா., பொதுச் சபையில் இந்தியருக்கு முக்கிய பதவி

நியூயார்க் :ஐ.நா., பொதுச் சபை தலைவரின் முதன்மை செயலராக, நாகராஜ் நாயுடு குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா., பொதுச் சபை தலைவர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மாலத்தீவு வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் வெற்றி பெற்றார். அவருக்கு, 143 ஓட்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட ஆப்கன் வெளியுறவு துறை அமைச்சர் சல்மாய் ரசூலுக்கு, 48 ஓட்டுகளும் கிடைத்தன.
இந்நிலையில் அப்துல்லா ஷாஹித், தன் சிறப்பு துாதராக, ஐ.நா.,வுக்கான மாலத்தீவு துாதர், தில்மீசா உசேன், முதன்மை செயலராக, இந்திய துணை துாதர் கே.நாகராஜ் நாயுடு ஆகியோரை நியமித்துள்ளார்.

இது குறித்து நாகராஜ் நாயுடு கூறியதாவது: ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாக, முக்கிய கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாக, ஐ.நா., பொதுச் சபை திகழ்கிறது. 193 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐ.நா., பொதுச் சபை, சர்வதேச அமைதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை விவாதிக்கும் தளமாக விளங்குகிறது. அதில், அப்துல்லா ஷாஹித் தலைமையில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை