நாட்டின் ஏற்றுமதி 52.39 சதவீதம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
நாட்டின் ஏற்றுமதி 52.39 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, இம்மாதத்தில் கடந்த, 7ம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில், 52.39 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு மாதத்தின் முதல் வாரத்தில், நாட்டின் ஏற்றுமதி, 52.39 சதவீதம் அதிகரித்து, 56 ஆயிரத்து, 283 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது. பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், இரும்பு தாது, எண்ணெய் வித்துக்கள், மசாலா பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி சரிவை கண்டுள்ளது.இறக்குமதியும் இதே காலகட்டத்தில், 83 சதவீதம் அதிகரித்து, 66 ஆயிரத்து, 430 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது.பெட்ரோலியம், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதி கிட்டத்தட்ட, 135 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியை பொறுத்தவரை அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி, 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.இறக்குமதியை பொறுத்தவரை, சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து செய்யப்படும் இறக்குமதி, 90.94 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை