தவறு செய்யும் அலுவலர்கள் பணி நீக்கம்

தினமலர்  தினமலர்
தவறு செய்யும் அலுவலர்கள் பணி நீக்கம்

சென்னை:'மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.'தவறு செய்யும் அலுவலர்கள் மீது, பணி நீக்கம் உட்பட, துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என, தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.க்ஷ

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மருத்துவ நெருக்கடி, மனநல பாதிப்பு, நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் ஒன்று சேர தாக்குதல் நடத்தும் நேரத்தில், ஒரு சில அரசு அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக நிறுவனத்தை சேர்ந்த சிலர் மேற்கொள்ளும், சட்டத்திற்கு புறம்பான, மனிதாபிமானமற்ற செயல்கள், முதல்வரின் கவனத்திற்கு வந்துள்ளன.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது; மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பது; அரசின் இலவச சேவைகளுக்கும், பாதிக்கப்பட்டோரிடம் லஞ்சம் பெறுவது போன்ற, மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறு செய்யும் அலுவலர்கள் மீது, பணி நீக்கம் உட்பட துறை ரீதியான நடவடிக்கைகள் பாயும்.இதுபோன்ற செயல்கள் குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அரசு துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள், காவல் துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆகியோருக்கு, அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

எந்த நிலையில் உள்ள அலுவலராக இருந்தாலும்; எந்த நிறுவனமாக இருந்தாலும், புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தவறு நடக்கக் கூடிய இடங்களில், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த, அறிவுரை வழங்கப்படுகிறது.மக்களின் உயிர் காக்கும் பணியில், முழு முனைப்போடு ஈடுபட்டு வரும் அரசுக்கு, தவறு செய்யும் ஒரு சிலரால், அவப்பெயர் ஏற்படாமல், கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டும்இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை