டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா? பொய்யான தகவல்களை பரப்பவேண்டாம்: புவனேஸ்குமார் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா? பொய்யான தகவல்களை பரப்பவேண்டாம்: புவனேஸ்குமார் வேண்டுகோள்

புதுடெல்லி: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அதன்பிறகு காயம் காரணமாக அடிக்கடி இவர் அவதிப்பட்டு வந்ததால் அதன் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் விளையாடவில்லை. மேலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற பெரும்பாலான தொடர்களில் இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் பெரிதாக வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரிலும் காயம் காரணமாக வெளியேறிய இவரின் பெயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இவரது பெயர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது புவனேஸ்வர் குமார் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு டி20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாக செய்திகள் வெளியானது.இதுகண்டு அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வர் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ``டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளேன் என்று சில பத்திரிகைகள் எழுதியுள்ளது. நான் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புகிறேன். அதை தற்போது உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். உண்மை என்ன என்று தெரியாமல் கற்பனையாக செய்தி வெளியிட வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் புவனேஸ்வர் குமார் கடந்த பல ஆண்டுகளாக தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் ஓய்வு பெறப் போகிறார் என்று பொய்யான செய்திகள் வெளியானதால் அவர் ஆதங்கத்தில் இந்த பதிவினை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை