செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது சீனாவின் ரோந்து வாகனம்
பீஜிங்: ஆய்வுகள் மேற்கொள்வதற்காக நம் அண்டை நாடான சீனா அனுப்பியுள்ள ரோந்து வாகனம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா மட்டுமே, இதுவரை வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியுள்ளன. அதில், அமெரிக்கா அனுப்பிய ரோந்து வாகனம் மட்டுமே, செவ்வாயின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.தற்போது அமெரிக்கா அனுப்பியுள்ள ரோந்து வாகனம், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 'தியான்வென்1' என்ற விண்கலத்தை சீனா அனுப்பியுள்ளது.அதில் உள்ள, 'ஜூரோங்க்' என பெயரிடப்பட்டுள்ள, 'ரோவர்' எனப்படும் ரோந்து வாகனம், நேற்று வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. அது, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்ற சோதனையில் ஈடுபட உள்ளது.ஆறு சக்கரங்களுடன், 240 கிலோ எடையுள்ள இந்த ரோந்து வாகனத்தில், ஆறு முக்கிய அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்கள் அது செவ்வாயின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.