ஆளே மாறிப்போன சமந்தா
சமீபகாலமாக வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் பல முன்னணி நட்சத்திரங்களும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு, வழக்கமான கதாநாயகியாக அல்லாமல், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா, வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை ஏற்கனவே திருப்பி விட்டார்.
அந்தவகையில் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற 'தி பேமிலி மேன்' என்கிற வெப் சீரிஸின் இரண்டாவது சீசனில் நடித்துள்ளார் சமந்தா. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத கும்பல் ஒன்றின் ஸ்லீப்பர் செல் ஏஜெண்ட்டாக முற்றிலும் புதிய ஒரு கேரக்டரில் தான் சமந்தா நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. தனது கதாபாத்திரத்திற்கு சொல்லப்பட்ட வலுவான பின்னணி கதையை கேட்டுத்தான் இந்த வெப் சீரிஸில் நடிக்கக ஒப்புக்கொண்டாராம் சமந்தா.
அதற்கேற்றபடி இந்தப்படத்தில் மேக்கப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் தராமல், சற்றே வித்தியாசமான தோற்றத்தில் ஆளே மாறிப்போய் காட்சியளிக்கிறார் சமந்தா. இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ள பாலிவுட்டின் இரட்டை இயக்குனர்களான ராஜ்-டிகே இருவருடன் இணைந்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தாலே, நாம் சொல்வது எவ்வளவு சரி என்பது நன்றாக தெரியும்.