முதலாம் கட்ட தங்க பத்திர வெளியீடு கிராம் 4,777 ரூபாயாக நிர்ணயம்

தினமலர்  தினமலர்
முதலாம் கட்ட தங்க பத்திர வெளியீடு கிராம் 4,777 ரூபாயாக நிர்ணயம்

புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் முதலாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்குகிறது.

இந்த முதலாம் கட்ட வெளியீட்டில், தங்கத்தின் விலை, ௧ கிராமுக்கு, 4,777 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்த முதலாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்கி, 21ம் தேதியுடன் முடிவடைகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான இந்த தங்க கடன் பத்திரங்கள், மே மாதம் துவங்கி, செப்டம்பர் மாதம் வரை மொத்தம், 6 கட்டங்களாக வெளியிடப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அண்மையில் தெரிவித்திருந்தது. பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு வெளியீடு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை நடைபெறும் பத்திர வெளியீட்டின் போது தங்கத்தின் விலை 4,777 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால், ‘கிரெடிட், டெபிட்’ கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 4,727 ரூபாய்க்கு கிடைக்கும்.வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.தனிநபர்கள் அதிகபட்சமாக, 4 கிலோ தங்கம் வரை இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் போன்றவை, 20 கிலோ வரை முதலீடு செய்யலாம். பத்திரத்தின் காலம், 8 ஆண்டுகள் ஆகும்.

மூலக்கதை